Saturday, April 9, 2011

லோக்பால் கூட்டுக்குழு: தலைவர் பிரணாப் முகர்ஜி!


லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவின் (JDC) தலைவராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்மட்டத்தில் இருப்போரின் ஊழலை விசாரிக்க மத்திய அரசு கொண்டுவரும் லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவில் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளும், மீதமுள்ளவர்கள் அரசுத் தரப்பிலிருந்தும் இடம்பெற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தார்.

மேலும் இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 தினங்களாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பலனாக, மத்திய அரசு பணிந்தது.

லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸாரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார்.

கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம் பெற்றுள்ளவர்கள்:

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்,
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி,
மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்
நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா ஹஸாரே,
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,
சட்டநிபுணர் சாந்தி பூஷன்
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும்
அரவிந்த் கேஜ்ரிவால்

லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி
இணைத் தலைவர் : சாந்தி பூஷன்
அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கூட்டுக்குழு தனது வரைவுப் பணிகளை முடித்து, அறிக்கையை சமர்ப்பிக்கும்.

No comments: