Saturday, August 20, 2011

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை ! - கருணாநிதி .



புதிய தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை, என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம், சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். நான் கூட என்ன செய்யப் போகிறார்களோ என்று நினைத்தேன்.

அதற்கு பதில் கிடைத்தது. மக்களுக்கு பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறார்கள். மருத்துவமனையாக ஒரு வீட்டை, ஒரு கட்டிடத்தை ஆக்குவதில் தவறில்லை.

நானே இதற்கு வழிக் காட்டியிருக்கிறேன். எனது கோபாலபுர இல்லத்தை எனக்கு பிறகு மருத்துவமனையாக மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்.

அதனால் புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் அதிருப்தி எதுவும் இல்லை. தாராளமாகச் செய்யட்டும். எப்படியோ நான் தொட்டுப் பார்த்து கட்டிய ஒரு கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள்," என்றார்.

No comments: