Wednesday, August 3, 2011

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம் : கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆஸ்பத்திரி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) ஆகும். இங்கு தினமும் சிகிச்சைக்காக சராசரியாக 10 ஆயிரம் பேர் வருகின்றனர். தினமும் 323 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோயாளிகளுடன் சேர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சேர்த்து தினமும் 50 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.

டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகின்றனர். ஆஸ்பத்திரியில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு அழைப்புக்காக பலமணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

அதேபோல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களது நோயை குணப்படுத்திக் கொள்ள இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களில் பெரும் பாலானோர் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் இங்கே எங்கேயாவது தங்க வேண்டிய நிலை உள்ளது.

வசதி உள்ளவர்கள் தங்கும் விடுதிகளில் பணம் கொடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வசதி இல்லாத ஏழை நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மரத்தடியிலும், சுரங்க பாதைகளிலும், நடைபாதைகளிலும் வசிக்கின்றனர். இன்னும் சிலர் கழிவறைகளையும் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.

No comments: