Tuesday, June 21, 2011

சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை “திடீர்” நில அதிர்ச்சி : பொதுமக்கள் வீட்டை விட்டு ஓட்டம் .


சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திப்பம்பட்டி, குள்ளப்பநாயக்கனூர், குரால் நத்தம், கூட்டாறு, தும்பல் பட்டி, கம்மாளப்பட்டி, சாமகுட்டப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை 5.21 மணியளவில் திடீரென நிலஅதிர்ச்சி ஏற்பட்டது.

அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடீரென நில அதிர்வை உணர்ந்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து வெளியே ஓடிவந்தனர். அனைவரும் வீட்டை விட்டு ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் நில அதிர்ச்சி ஏற்பட்டதை பற்றி பரபரப்புடன் பேசிக் கொண்டனர்.

இதுகுறித்து திப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் தியாகராஜன், கூறியதாது:-

அதிகாலை நாங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தோம். அப்போது திடீரென வீடுகள் அதிர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த சத்தத்தை கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் எழுந்து அழ ஆரம்பித்து விட்டனர். சுமார் 2 நிமிடங்கள் அளவுக்கு நீடித்தது என்றார்.

இதுகுறித்து குரால்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் கூறும் போது, நாங்கள் அதிகாலை நேரத்தில் வயலில் அரளி பூ பறித்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென டமார் என்று கட்டிடம் இடிந்து விழுவது போன்று சத்தம் ஏற்பட்டது.அப்போது பக்கத்தில் பண்டிகைக்கு வெடி வெடிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டோம்.

பிறகு தான் அது நில அதிர்வு என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் வயலில் பூ பறித்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் வயலில் இருந்து ஓடி வந்து விட்டனர் என்றார்.

வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம், மோட்டூர், சோமம்பட்டி, மன்னார் பாளையம், பொன்னாரம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களிலும் இன்று அதிகாலை 5.20 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து விலாரிப் பாளையம் கிராம மக்கள் தெரிவித்ததாவது:-

விவசாய தோட்டத்தில் வேலை செய்வதற்காக பெரும்பாலானோர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வயலுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தோம். அப்போது சுமார் 5.20 மணிக்கு வெடி வெடித்தது போல் சத்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அலை அலையாக நிலத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. அதனால் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினோம்.

இதுவரை ஏற்படாத வகையில் எங்கள் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றனர். விவசாயி சீனிவாசன் என்பவர் கூறும் போது, சத்தம் கேட்டதும் எனது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தொடர்ந்து சில வினாடிகளுக்கு நில அதிர்வை உணர முடிந்தது. அக்கம், பக்கத்து வீடுகளில் இருந்தும் தெருவுக்கு வந்து நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.என் வாழ் நாளில் இது போன்ற ஒரு நில அதிர்வை முதல்முறையாக உணர்வதால் உடலில் நடுக்கமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது என்றார்.

ஆத்தூர் சுற்று வட்டார பகுதியில் பெத்த நாயக்கன்பாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், ஆரியப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் உருண்டு ஓடியது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

புத்திர கவுண்டன்பாளையம் வடக்கு தெருவில் உள்ள விஜய் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு ஓடியது. இதுகுறித்து புத்திர கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கூறும் போது, இன்று அதிகாலை பயங்கர சத்தம் ஏற்பட்டு நில அதிர்வு ஏற்பட்டது. வீடே இடிந்து விழும் அளவுக்கு இருந்ததால் நாங்கள் அனைரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தோம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் தெருவில் அதிர்ச்சியுடன் இருந்தோம் என்றார்.

இதே ஊரை சேர்ந்த குமுதா என்ற பெண் கூறும் போது, இன்று அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஏதோ விபரீதம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டோம் என்றார். இந்த நில அதிர்வு காரணமாக சேலம் மாவட்டத்தில் மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக வீட்டிற்குள் செல்ல பயந்து வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.

ரிக்டர் அளவில் 2.9 பதிவானது : 5.21-க்கு தொடங்கி 5.22 வரை 1 நிமிடம் நீடித்த நில அதிர்வு.

இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு சேலம் மாவட்ட வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி இருந்தது. அதில் சரியாக அதிகாலை 5.21 மணிக்கு தொடங்கி 5.22 வரை 1 நிமிடம் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பதாக பதிவாகி இருந்தது.

மேலும் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 2.9 அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், 1 நிமிடம் நீடித்ததால் நில அதிர்வை பொதுமக்கள் அதிகம் உணர்ந்து இருப்பார்கள் என்று வானியை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


No comments: