Tuesday, June 21, 2011

குலக் கல்வித் திட்டப் போர் வேறு பெயரில் மூண்டுவிட்டது.



தினமலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்து நிலை சார்ந்த ஊடகங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது. தகுதி, திறன் என்பன பற்றியெல்லாம் வாய் கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொருபுறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்து நிலையையே பெரும்பகுதியினரின் கருத்து நிலையாகக் காட்ட முயற்சிக்கின்றனர்.

நல்லவர்களின் நாடித் துடிப்பு நம் வாழ்வு என்னும் கிறித்தவ அமைப்பு நடத்தி வரும் வார இதழில் (19-6-2011) ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.

அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப்படும். முதலடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு காலப் போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற எழுத்தாளர் சின்னக் குத்தூசி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது (29-5-2011) ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த விடக்கூடாது. அதை அழித்தே தீருவேன் என்கிற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி, அதுவும் சமமான கல்வி என்பது பார்ப்பனியத்துக்கு எதிரானதே! சோவின் தலையங்கம் அதனை வெளிப்படையாகவே கூறுகிறது.

வெறிநாயை அடித்துக் கொல்லுவது போல வெகு மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - இந்தக் காலகட்டத்திலும் சோ ஆதரித்து எழுதுகிறார் என்றால், அந்தப் பார்ப்பனப் புத்தி அனைவருக்கும் சமமான கல்வி என்னும் சமச்சீர் கல்வியை எப்படி ஏற்றுக் கொள்ளும்? சுருக்கமாகச் சொன்னால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்ட புத்தியுள்ளவர்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமா?

சமச்சீர் கல்வி பார்ப்பனர் அல்லாதாருக்கானது. சமச்சீர் கல்வி எதிர்ப்பே பார்ப்பனர்களுக்கானது.

ஆம். குலக் கல்வித் திட்டப் போர் வேறு ஒரு பெயரில் மூண்டுவிட்டது.

தமிழர்களின் கல்வியில் கை வைத்த வர்களைத் தமிழர்கள் தண்டிக்காமல் விட்டதில்லை. 1952 இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களின் தலையில் கைவைத்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரியான அடி வாங்கினார். மொத்தம் 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றார்.

சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட ஒரு குழுவினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்து விட்டார்.

அதற்கான விலையை இந்த ஆட்சி கொடுக்க வேண்டிவரும்.

குலக்கல்வித் திட்டம்.

அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும்; அரை நேரம் படித்தால் போதும் என்று கூறி அன்று ஆச்சாரியார் ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தாரே - அந்தக் குலக் கல்வித் திட்டத்தை... இன்றைக்கும் ஆதரித்து எழுதுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

அந்தக் குலக்கல்வித் திட்ட ஆதரிப்புக் கனவான்கள்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்பதை அடிக்கோடிட்டு மனதில் நிறுத்துக!

தினமலர் - வாரமலரில் (4.4.2010) கேள்வி ஒன்றக்குப் பதில் என்ன தெரியுமா?

கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட, ஏதாவது கைத்தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு, ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத்தொழில் ஒன்றை கற்று தொழில் செய்யலாமே... தினமலர் அத்துமணியின் பதில் இதோ:

கற்றுத் தருவதுடன் நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினார். அப்போது இந்தத் திராவிட கட்சிகள், குய்யோ முறையோ எனக் கத்தி, பைசா பெறாத காரணங்களையும், ஜாதிவெறியையும் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை - காலையில் ஏட்டு கல்வி, மாலையில் தொழிற்கல்வி. தொடர விடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்! ஏதோ தினமலர் மட்டும்தான் இப்படி கூறுகிறது என்று கருத வேண்டாம்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப் பட்ட 26 ஆண்டுகளுக்குப்பிறகு (1980 ஜூலை) கல்கி என்ன எழுதியது தெரியுமா?

ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும் ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்குவது.

தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது. என்றால் அவாளின் இரத்தத்தில் சூடேறிக் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வைத் தமிழர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

தினமலரும், கல்கியும் மட்டுமா? இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பெருந்தலைவர் யார் தெரியுமா? அவர்தான் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 34 ஆண்டு களுக்குப் பிறகு அவரின் துக்ளக்கில் (15.7.1988) எழுதுகிறார். ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் என்று எழுதினாரே!

இந்தக் கூட்டம்தான் தங்களுக்கு வசதியாக - இன ரீதியாக முதல் அமைச்சர் கிடைத்து விட்டார். என்றவுடன், சமத்துவக் கல்வி திட்டமாம் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு உலை வைக்கின்றனர். உஷார்! உஷார்!!

No comments: