Sunday, June 5, 2011

உண்ணாவிரதப் பந்தலுக்கு தீ வைப்பு, கண்ணீர் புகை குண்டு வீச்சு - மீண்டும் எர்ஜென்சி : அத்வானி கண்டனம்.


ராம்தேவ் உண்ணாவிரத பந்தலில் தாக்குதல் : அத்வானி கண்டனம்

ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த ராம்தேவ் உண்ணாவிரத பந்தலில் இருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி,

ராம்லீலாவில் போலீஸ் நடத்திய தாக்குதல் 1975 நெருக்கடி நிலையை நினைவூட்டுகிறது. வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வரவேண்டியது அரசின் கடமை. ராம்தேவ் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

ராம்தேவை வெளியேற்றியது அவமானகரமான செயல் : சாந்தி பூஷன்

இதுகுறித்து பிரபல வக்கீல் சாந்தி பூஷன் கூறுகையில், இது ஒரு அவமானகரமான செயல். இதற்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றார்.

ராம்தேவை வெளியேற்றியது கொடூரமான செயல் : ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம்மகா தேவ் கூறுகையில், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? என்று சந்தேகமாக உள்ளது. ஊழலை எதிர்ப்பவர்கள் மீது அரசே தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் சட்டம் வளைத்து உடைக்கப்பட்டு விட்டது. இது ஒரு கொடூரமான செயல் என்றார்.

ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக இல்லை : மேதாகட்கர்

சமூக சேவகர் மேதாகட்கர் கூறுகையில், போலீசார் நடத்திய தடியடி மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக இருந்தது. வன்முறை இல்லாமல் நடக்கும் உண்ணாவிரதத்தை எப்படி எதிர்கொள்வது என்று மத்திய அரசுக்கு தெரிய வில்லை என்பதையே இது காட்டுகிறது. இதன் மூலம் ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு உண்மையாகவோ, தீவிரமாகவோ இல்லை என்பது உறுதி ஆகிறது என்றார்.

ராம்தேவின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது : நிதின் கட்காரி

ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த ராம்தேவின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நள்ளிரவு வெளியேற்றப்பட்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. பெண்கள், குழந்தைகள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இது எமர்ஜென்சியை நினைவுப்படுத்துவது போல உள்ளது.

உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஜனநாயகம் மீது விழுந்த அடியாகும். இதற்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் 24 மணி நேர சத்தியா கிரகப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜேட்லி கலந்து கொள்வார்கள். நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்.

பாரதீய ஜனதா சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படும். இதில் பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஊழல், கறுப்புப்பணத்துக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. உண்ணா விரதம் இருந்தவர்கள் மீது மத்திய அரசு ஏன் இந்த தந்திரமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இந்த கொடூர செயலுக்காக நாட்டு மக்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்தியில் ஆளும் அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே ஆட்சியில் நீடிக்க மத்திய அரசுக்கு தார்மீக உரிமை இல்லை.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

ராம் தேவ் உண்ணாவிரதம் : பந்தலுக்கு தீ வைப்பு

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக 04.06.2011 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது.

மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாததால் ராம்தேவ் தொடர்ந்து உண்ணா விரதத்ததில் ஈடுபட்டார். இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இவர் கைது செய்யப்படுவார் என்ற பதட்டத்தை தொடர்ந்து போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். போராட்ட பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.

No comments: