Wednesday, June 22, 2011

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி : நிதி மந்திரியை, மத்திய அரசே உளவு பார்ப்பதா? சுஷ்மா சுவராஜ் கேள்வி.

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி: நிதி மந்திரியை, மத்திய அரசே உளவு பார்ப்பதா?    சுஷ்மா சுவராஜ் கேள்வி

மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியின், அமைச்சக அலுவலகத்தில் மத்திய உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்பு கருவிகளை பொருத்தி கண்காணித்தது தெரியவந்தது. தனது அலுவலகத்தின் பாதுகாப்பு குறித்த ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமருக்கு பிரணாப்முகர்ஜி கடிதம் எழுதினார். செப்டம்பர் 7-ந் தேதி அவர் எழுதிய கடிதத்தில், தனது அலுவலகத்தில் 16 ரகசிய கண்காணிப்பு மற்றும் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. என்றாலும் நேரடியாக ஒட்டுக் கேட்டும் மைக்ரோ போன் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட வில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து உளவுத்துறை அளித்த விளக்கத்தில், பிரணாப்முகர்ஜி மேஜைக்கு அடியிலும், அவர் பகுதியிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சில பொருட்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவற்றை எடுத்து தடயவியல் சோதனை செய்தபோது, அந்த பொருட்கள் சூயிங்கம் என்று தெரியவந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுக்கேட்பு பிரச் சினை குறித்து பிரணாப் முகர்ஜியிடம் கேட்டபோது, உளவுத்துறையினர் எனது அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்தது உண்மை. ஆனால் அந்த ரகசிய கண் காணிப்பு மூலம் எதையும் அவர்கள் கண்டுபிடிக்க வில்லை என்று கூறினார்.

இது குறித்து பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் டியூட்டர் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-

மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்திலேயே பாதுகாப்பு விதி மீறப்பட்டுள்ளது. இதை சாதாரண பிரச்சினையாக கருத முடியாது. அவரது பாதுகாப்பு தொடர்பான இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு சரியான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட வேண்டும். தனது நிதி மந்திரியையே மத்திய அரசு உளவு பார்ப்பதா? இது என்ன தனியார் நிறுவனமா? உளவுத்துறை அளித்துள்ள விளக்கத்தில் நிதி மந்திரி அலுவலக சுவரில் சூயிங்கம் இருந்ததாக கூறுவது விளையாட்டுத் தனமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினை பற்றி அரசு முழு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுஷ்மாசுவராஜ் கூறியுள்ளார்.


No comments: