Thursday, June 2, 2011

கனிமொழியின் சிறை வாழ்க்கை !


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணைக் கைதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து உறுதிகுலையாத அரசியல் வாதியாகக் காணப்படுகிறார்.

சிறை எண் 6-ல் 475 பெண்கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, குறுகிய காலத்திலேயே அங்கு புகழ்பெற்றுவிட்டார்.

சிறையில் மற்றவர்களுக்கு உதவுவதில் கனிமொழி தனக்குத்தானே பிஸியாக்கிக் கொண்டுவிட்டார். சிறைக்கைதிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை சிறை நிர்வாகத்திடம் கொண்டுசெல்கிறார்.

சமீபத்தில் சிறை எண் 6-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சக கைதிகள் பெரும் எதிர்பார்ப்புடன் கனிமொழியை அணுகினர். அவரும் அவர்களை ஏமாற்றாமல் சிறை நிர்வாகத்திடம் அந்தப் பிரச்னையைக் கொண்டுசென்றார். உடனடியாக அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் கனிமொழியைக் காண கைதிகள் காலையிலேயே கூடி விடுகின்றனர். அங்கிருந்து அவர் தினமும் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது வணக்கம் தெரிவித்து அவரை வழி அனுப்பி வைக்கின்றனர்.

மாலையில் சிறையில் இருந்து அவர் திரும்பும்போது அறை வாசலில் நின்று அவரை வரவேற்கின்றனர். மீண்டும் அவருடன் உரையாட கைதிகளுக்கு நேரம் கிடைக்கிறது.

சிறை வசதிகள் குறித்து சிறையின் கண்காணிப்பாளருடனும், இதர அதிகாரி களுடன் கனிமொழி உரையாடுவதைக் காணமுடிவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைக்கு சென்ற முதல்நாளில், அவருக்கான கழிவறை குறித்து புகார் தெரிவித்தார். பின்னர் அது மாற்றப்பட்டது.

கனிமொழி அவரது அறையில் படிப்பதிலும், டிவி பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுகிறார்.

வீட்டில் கொண்டுவரப்பட்ட உணவை சாப்பிட கனிமொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது சிறை உணவையும் ருசிபார்க்கிறார். கொசுவர்த்தியும் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: