Thursday, June 2, 2011

மாணவியை கற்பழிக்க முயற்சி : வாலிபரை உயிருடன் எரித்த கிராம மக்கள்.


ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மவுனிகா (18) இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார். அவளது பெற்றோர் விவசாய கூலி வேலைக்கு சென்றனர். அப்போது மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை கற்பழிக்க முயன்றான். இதனால் அவர், காப்பாத்துங்க என்று கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவள் மயங்கி விழுந்தாள்.

அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ஆடை களைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பாபுவை ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையறிந்ததும் ஜாபர் கட் பகுதி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பாபுவை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான். இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் பாபுவை குண்டு கட்டாக தூக்கிச் சென்று வைக்கோல் போரில் தூக்கிப் போட்டனர். பின்னர் வைக்கோலுக்கு தீவைத்தனர். இதில் பாபுவின் உடல் மீது தீ பற்றியது. சிறிது நேரத்தில் அவன் துடிதுடித்து இறந்து போனான்.

போலீசார் முன்னிலையில் பாபு உயிருடன் எரிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையறிந்ததும் கிராம மக்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்தினரை தேடி வருகிறார்கள். மாணவி மவுனிகாவுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments: