Sunday, May 29, 2011

ரஜினிக்கு விசேஷ டாக்டர்கள் சிகிச்சை.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ராணா படதொடக்க விழாவில் கலந்து கொண்டு முதல் காட்சியில் நடித்தார். அப்போது படப்பிடிப்பு குழுவினருடன் சாப்பிட்டு வீடு திரும்பிய போது உடல் நலக் குறைவு ஏற்பட்டது. வயிற்று கோளாறு காரணமாக வாந்தி ஏற்பட்டது.

இதையடுத்து மைலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மூச்சு திணறல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்யப்பட்டது.

சிறு நீரக பாதிப்புக்கு மேல் சிகிச்சை பெறுவதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறு நீரக சிகிச்சையில் ஆசியாவிலேயே பெரிய மவுன்ட் எலிபெத் மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் அங்கு நவீன வசதிகளுடன் கூடிய விசேஷ வார்டில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் உடனடியாக சிகிச்சையை தொடங்கினார்கள். முதலில் ரஜினியின் உடல் உறுப்புகள் பாதிப்பு குறித்து அவருடன் சென்ற சென்னை டாக்டர்களுடன் சிங்கப்பூர் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், பல்வேறு சோதனை அறிக்கைகளையும் பார்த்து ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு ரஜினிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய விசேஷ குழு அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரஜினி அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டது. சென்னை ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்யும் போது ரஜினிக்கு வலி அதிகமாக ஏற்பட்டதாகவும், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் வலி இல்லாத வகையில் நவீன முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டது.

டயாலிசிஸ் செய்யப்பட்ட பிறகு அவரது சிறு நீரகங்களின் செயல்பாடு குறித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்கிறார்கள்.

ஒருவருக்கு 2 சிறு நீரகங்கள் இருக்கும். இதில் ஒன்று செயல் இழந்தால்கூட மற்றொன்றின் மூலம் உயிர் வாழலாம். இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தால் டயாலிசிஸ் செய்து அதன் பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அடுத்த கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்கிறார்கள்.

ரஜினிகாந்த் நேற்று முன் தினம் இரவு சிங்கப்பூர் சென்ற போது அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின் ஆகியோர் சென்றனர். சில காரணங்களால் மனைவி லதா ரஜினி காந்த் செல்லவில்லை. நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

No comments: