Monday, April 4, 2011

நாட்டை மாசுபடுத்தும் சாயத்தொழில் - தீர்வு என்ன?

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலைப் பொழுதினில் நொய்யல் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப் பாளையம் அணையைப் பார்வையிட என் போன்ற சுற்றச்சூழல் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சென்றபோது ஒரு முண்ணனி தொலைக்காட்சியின் நிருபர் முன் ஒரு பாட்டி பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்...

"எங்க விவசாயத்தை நாசம் செய்து எங்க வாழ்க்கையை நாசம் செய்த திருப்பூர்காரனுக நாசமாப்போவானுக.. அவனுக புள்ளைகுட்டி எல்லாம் நாசமாப்போகுங்க... எங்க சாபம் அவங்கள சும்மாவிடாது" என்ற பாட்டியின் பேட்டி என்னை தூக்கிவாரிப்போட்டது... (அதே பாட்டி பாலமுருகனின் நொய்யல் பற்றிய குறும்படத்தில் பேட்டி கொடுத்துள்ளதாக ஞாபகம். இவ்வளவுக்கும் அந்தப் பாட்டி எந்தச் சமூகம் திருப்பூரில் மிகுதியாக பனியன் & சாயமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளதோ அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவந்தது…).

நண்பர்களுடன் வேகமாக ஓடிப்போய் அணைமீது ஏறி பார்த்தபோது ஏதும் புரியவில்லை. அணையில் அவ்வளவு தண்ணீர் இருக்க, ஒரத்துப்பாளையம் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று அன்றாட தேவைக்கு நீர்கொண்டுவந்து உபயோகித்தார்கள். பணப்பயிர்களான வெற்றிலை போன்ற தாவரங்கள் நன்கு வளர்ந்தும் வளராமலும் ஒருவிதமாய் குறுகிப்போய் வாடிக்கொண்டிருந்தன. இள‌நீரைக் குடிக்க‌லாம் என்று கேட்ட‌போது ஒரு இள‌நீரை வெட்டிக்கொண்டுவ‌ந்து கொடுத்தார்க‌ள். வாயில் வைக்க‌ முடியாத‌ப‌டி ஒருவித ஆகாத‌ சுவையோடு இருந்த‌து. என் உட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் அணை நீரில் கையால் அல‌ம்பினார். சில‌நிமிட‌ங்க‌ளிலேயே

கை அரிப்பெடுத்து சொறிய‌ ஆர‌ம்பித்தார். ஆடு மாடுக‌ள்.. நாய், ப‌ன்றிக‌ள் கூட‌ அந்த‌ நீரை குடிப்ப‌தில்லை‌!.

ஒரு காலத்தில் காவேரி வரண்டபோது அதை ஈடுகட்டும் வகையில் நொய்யல் பெருக்கெடுத்து ஓடி தஞ்சை வளம் காத்ததால் அதற்கு காஞ்சிமாநதியென்று பெயர் வந்ததாக சிலர் சொல்லக்கேட்டுள்ளேன். இன்று நொய்யல் வரண்டுவிட‌வில்லை. ஆனால் அதன் நீர் சீண்ட ஆள் இல்லாமல் உள்ளது வேதனைக்குரியது. திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் அனைவருமே 11,000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கொடுத்து வந்த ஏற்றுமதி வியாபாரம்... சில லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துவந்த தொழில் நசிகிறது நாட்டுக்கு நல்லதா என்று தேசபக்தி வேடம் போடுகிறார்கள், சாய ஆலை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்! தங்கள் தொழிலின் மூலம் ஒரு நதிக்குச் சமாதிகட்டி உள்ளோம் என்கிற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

எது தேசபக்தி என்ற கேள்வி பிறக்கிறது. நம் மண்ணின் விவசாயம் நசுக்கப் பட்டுள்ளது; இயற்கை அழிக்கப்பட்டுள்ளது; நமக்கான உணவு விளைச்சல் நிலங்கள் ஒழிக்கப்பட்டு உள்ளன; விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து விரட்டப் பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு சீரழிகிறது. எது தேசபக்தி என்ற கேள்வி மீண்டும் பிறக்கிறது! ஒரத்துப்பாளையம் அணை விவசாயிகளின் தேவைக்காக காமராசர் ஆட்சிக்குப் பின் கட்டப்பட்ட ஒரே அணை. அதுவும் இராசயன நீர்ச் சேர்க்கையால் ஒரு நீர் குண்டாக மாறி நிற்கிறது. அது கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமலே வீணாக்கப்பட்டுவிட்டது. சரி எல்லோருமே குற்றம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டி ருந்தால் தீர்வு என்ன?

அமெரிக்கா & அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு நதிகளோ விவசாயமோ நாசமாகக் கூடாது என்பதில் தேசபக்தியோடு இருந்துகொண்டு, நீரை & மண்ணை நாசமாக்கி தயாராக்கும் பொருட்களை மற்றநாடுகளைச் செய்யச்சொல்லி வாங்கி
பயன்படுத்துகிறார்கள்..அந்தவகையில் மேலை நாட்டுக்காரன் எந்தக் கலரில் தான் பின்னலாடைகளை அணிய விரும்புகிறானோ அந்த வண்ண ஆடைகளை திருப்பூருக்கு ஆர்டர் கொடுக்கிறான். உனக்கு என்ன கலரில் பின்னலாடை தேவையோ அந்தக் கலரில் தயாரித்துக் கொடுக்க நான் தயாராக உள்ளேன். அதனால் என் தாய்நாட்டின் நதியோ விவசாயமோ நாசமாவது பற்றி எனக்கு கவலையில்லை என்கிற நமது பின்னலாடை & சாய ஆலை முதலாளிகளின் போக்கு மாறவேண்டும். தூங்கிக் கொண்டோ அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டோ நதிகளும் விவசாயமும் நாசமாவதை வேடிக்கை பார்க்கும் தற்போதைய மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு, குறைந்தபட்சம் விவசாய நலன் பற்றி சிந்திக்கிற மனிதர்களை நியமித்து, திருப்பூரின் சாய‌மிடும் தொழில் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

இன்றைய நிலையில் திருப்பூர் சாய ஆலைகள் செயல்படா விட்டாலும் திருப்பூருக்கான சாயமிடும் பணியானது லாரி மூலம் துணிகளை எடுத்துச்சென்று ஈரோடு, பவானி, திண்டுக்கல், கோவை போன்ற ஊர்களில் நடந்துகொண்டுதான் உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு இது தெரியாதா?. மாசுகட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்று நம்ப வேண்டி உள்ளது.

நொய்யல் நதி, ஜம்மனை நதி, நல்லாறு என்ற மூன்று நதிகளையும் அவை சார்ந்த 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களையும் நாசப்படுத்திய பின்னலாடைக்கான சாய ஆலைகள் காவிரியையோ அல்லது இதர நதிகளையோ விவசாய நிலங்களையோ நாசப்படுத்தாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்துமா?

சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் அறிவித்து நான்கு நாட்கள் ஆன பின்பும் நொய்யலில் 4100 அளவு உப்பு நீர் சாயக்கழிவுநீருடன் செல்வது என்பது, சாயப்பட்டறை உரிமையாளர்களில் சிலரோ பலரோ நீதிமன்ற உத்தரவை
மதிக்கத் தயாரில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அதோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

04.02.2011 வெள்ளியன்று நடந்த வேலை நிறுத்தத்தில் பல பனியன் கம்பனிகள் கலந்துகொள்ளாமல் வேலை செய்தன. ஏன் இப்படி என்ற விசாரணையில் கேள்விப்பட்டது, 2005 க்கு முன்பாகவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு & தண்ணீர் சுத்தகரிப்பு நிலைய பணிக்கான செலவு என்ற வகையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஒருகிலோ துணி சாயமிட ஏற்கனவே உள்ள கூலியுடன் ரூபாய் 25 வரை சேர்த்து வாங்கிவிட்டு எந்தச் செல‌வினங்களுக்காக வாங்கினார்களோ அதை முறையாகச் செய்யாமல், பல சாயப்பட்டறை முதலாளிகள் தங்கள் அல்லது உறவினர்களின் பெயரில் வீடு, காடுகளை வாங்கிப் போட்டுள்ளார்கள். வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதைச் சுத்தகரிப்பு நிலைய கணக்குகளும் வருமான வரித்துறையும் விவசாயிகளும்தான் கூறவேண்டும்.

க‌ருப்பு, பாட்டில்கிரீன், பிள‌வ‌ர்சென்ட் ம‌ற்றும் அட‌ர்த்தி அதிக‌ம் (FAST COLOUR) கொள்ளும் க‌ல‌ர்க‌ளுக்கு அர‌சு த‌டை விதிக்க‌ வேண்டும். முத‌லாளிக‌ளும் தேச‌ பாதுகாப்பிலும் சுற்றுச்சூழலிலும் த‌ங்க‌ளுக்கும் ப‌ங்கு உண்டு என்ப‌தை உண‌ர்ந்து இதைக் க‌டைப்பிடிக்க‌ முன் வ‌ர‌வேண்டும். (அடர்த்தி மிகு கலர்கள் (FAST COLOUR) சாயமிடும்போது, அந்த வேலை செய்பவர்கள் தங்கள் உடல்மீது இராசயன பொருட்கள் பட்டுவிடாமல் இருக்க பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொள்கிறார்கள். மேலும் சில இராசயன பொருட்கள் கையில் பட்டால் துளையிட்டுவிடும் அபாயமும் உண்டு. மனிதனையே துளைக்கும் சாயமிடும் தொழிலின் மூலப்பொருட்களின் கழிவுகள் நிலத்தில் தேங்கி நிலத்தடிநீரில் இணைந்தால் விவசாயம் என்ன ஆகும்?).

அமெரிக்காவிலிருந்து வரும் கோக்கோகோலா என்ற பானத்தின் தயாரிப்பிடம் அமெரிக்காவில் இல்லை. கோக்கோகோலா தயாரிப்பு என்பது இராசயனம் சம்பந்தப்பட்ட மாசுவை வெளியேற்றும் தொழில் என்பதால், அது விவசாயத்தை நாசப்படுத்தும் என்பதால், அந்தத் தொழிற்சாலையைத் தேசபக்தி கொண்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டிற்குள் நடத்தவில்லை என்பதைச் சாய ஆலை, பின்னலாடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். மேலை நாடுகளின் தேவைக்காக இந்தியாவை விவசாயம் அழிந்த ஒரு குப்பைக்கூடையாக மாற்றலாமா?

முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லவேண்டாமா?

பனியன் உற்பத்திக்காக பலப் பல இயந்திரங்களை தயாரிக்கும் மேற்குலக நாடுகள் ஏன் பனியனைத் தயாரிக்க முன்வருவதில்லை? பின்னலாடை சாயஆலை உரிமையாளர்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.

செயற்கை ரசாயன சாயங்களை தவிர்ப்பதன் மூலமும் கலர் பருத்தி விளைவிப்பதன் மூலமும் சாயப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளும் சாயப்பட்டறை உரிமையாளர்களும் இதை ஏற்றுக்கொண்டு நாட்டின் நலனே முக்கியம் என்று ஒப்புக்கொள்வார்களா? கேள்விக்குறிதான்! சாய ஆலை கழிவுநீரை குழாய்மூலம் கடலுக்குக் கொண்டு செல்வதில் உள்ள இடையூறுகள், பாதிக்கப்படும் விவசாயம், மீன்பிடி தொழில் பற்றி தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும்! எனவே இதுவும் சாத்தியமில்லா ஒன்றுதான்.

சாய‌ ஆலைகளிலிருந்து வெளியேறும் க‌ழிவு நீரில் உப்பின் த‌ன்மை விவ‌சாய‌ நில‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ளும் 2100 அள‌வைவிட‌ குறைவாக‌ இருப்ப‌தை விவ‌சாயிக‌ள் மூல‌ம் அடிக்க‌டி நீதிம‌ன்ற‌ம் உறுதிசெய்துகொள்ள‌ வேண்டும்.

இது ஒன்றுதான் சாய ஆலைகளின் பிரச்சனைக்குத் தீர்வு! மற்றவை அனைத்தும் தேவையில்லாமல் பேசப்படும் வீண் விவாதங்கள்தான்.!

இது தவிர சாய ஆலைக்கழிவுகள் மூலமாக வந்துள்ள, மூட்டை மூட்டையாக கட்டிப் போடப்பட்டுள்ள காற்றின் மூலமாக மனிதனை முடமாக்க காத்திருக்கும் திடக் கழிவுகளுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும்.

நீதிமன்றமோ மாசுக் கட்டுப்பாட்டுத் துறையோ சாய ஆலை முதலாளிகளோ மக்களோ பத்திரிக்கைகளோ இந்தத் திடக் கழிவு பற்றி வாய்பேசாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பாதிப்பு வந்தபின்புதான் அது பற்றி பேசுவார்களோ என்னவோ.?

பணம் மட்டுமே குறியாக இருந்து அதை சம்பாதித்து அடுத்த தலைமுறைக்கு வைத்துவிட்டுச் செல்லும் முதலாளிகள் தங்கள் வாரிசுகளுக்கு இயற்கையை நல்ல முறையில் விட்டுச்சென்றால் தானே அவர்கள் பசி, நோய், நொடி இன்றிவாழ முடியும்?? பசிக்காக பணக்கட்டுகளையும் தாகத்திற்காக சாயக்கழிவு நீரையுமா பயன் படுத்த முடியும்.?

ஒருநாட்டின் சுயமுன்னேற்றம் என்பது விவசாயத்தை அழிக்கும் தொழில் வளர்ச்சியா?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?... சீரழிப்பார்களா?...

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

- கதிர்.

.inneram.com

No comments: