Sunday, April 24, 2011

சாய்பாபா இன்று காலை காலமானார்.


உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 .

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத் திணறல், இருதயக் கோளாறு காரணமாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார்.

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர். பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு பாபாவின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக சாய் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகே, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...

'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.

சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நான்கு லட்சம் பக்தர்கள்

உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

சாய்பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.


No comments: