Sunday, April 24, 2011

தப்பி ஓடியபோது போலீஸ்நிலையத்தில் தவறுதலாக புகுந்து சிக்கிய திருடர்கள்.

தப்பி ஓடியபோது போலீஸ்நிலையத்தில் தவறுதலாக புகுந்து சிக்கிய திருடர்கள்

டெல்லியில் வழிப்பறி திருடர்கள் தப்பி ஓடிய போது தவறுதலாக போலீஸ் நிலையத்தில் புகுந்ததால் சிக்கினார்கள். டெல்லியைச் சேர்ந்த வழிப்பறி திருடர்கள் தீபக், ரவீந்தர். இருவரும் நண்பர்கள். தனியாக வருவோரை குறிபார்த்து இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டனர். இவர்களை டெல்லி முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

நேற்று மாலை இருவரும் டெல்லி பஞ்சாபிபாக் பகுதியில் நோட்டமிட்டபடி சென்றனர். அங்கு சிவாஜி பார்க் என்ற பூங்காவில் ஹீராபால் (20) என்பவர் தனியாக சென்று கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே தீபக்கும், ரவீந்தரும் அவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். உடனே ஹீராலால் அடிதாங்க முடியாமல் கீழே விழுந்து படுத்து இறந்த வர்போல் நடித்தார்.

இதனால் பயந்து போன வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் ஹீராலால் எழுந்து அங்கிருந்த பொது மக்களுடன் சேர்ந்து வழிப்பறி திருடர்களை துரத்தினார். இருவரும் நீண்ட தூரம் ஓடியபின்பு களைத்துப்போய் ஒரு தெருவில் நுழைந்தனர். அது ஒரு முட்டுச் சந்தில் முடிந்தது. அப்போது பின்னால் ஹீராலாலும், பொதுமக்களும் துரத்தி வருவதை பார்த்தனர்.

அவர்கள் கையில் சிக்கினால் ஆபத்து என்று கருதிய வழிப்பறி திருடர்கள் எதிரில் இருந்த பெரிய சுவரில் தாவி ஏறி குதித்தனர். குதித்த பிறகுதான் தெரிந்தது அது டெல்லி மேற்கு பகுதி போலீஸ் நிலையம் என்று. உடனே அங்கிருந்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் போலீஸ் தேடும் வழிப்பறி திருடர்கள் என்று தெரியவந்தது. இதற்குள் ஹீராலாலும், பொதுமக்களும் அங்கு வந்து நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments: