Thursday, April 21, 2011

தமிழக சட்டசபை தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை முறையில் மாற்றம். - முடிவுகள் தாமதமாக வெளியாகும்.

தமிழக சட்டசபை தேர்தல்:   ஓட்டு எண்ணிக்கை   முறையில் மாற்றம்;   முடிவுகள் தாமதமாக வெளியாகும்

தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 22 நாட்கள் உள்ளதால் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும், ஒரு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில்தான் எண்ணப்படும். இதற்காக 234 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டு எண்ணிக்கையை நெறிப்படுத்துவார்கள்.

ஓட்டு எண்ணிக்கையில் இந்த தடவை புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.

ஆனால் இந்த தடவை ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு விபரத்தை வெளியிட முடியும். ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜை மீது வைத்து எண்ணப்படும்.

ஒவ்வொரு பகுதி மின்னணு எந்திரங்களை 14 மேஜைகளிலும் வைத்து எண்ணுவார்கள். 14 மேஜை ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மதியத்துக்கு பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

No comments: