Thursday, April 21, 2011

இலங்கை அரசைக் கண்டித்து 25-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் : வைகோ.


இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் ஐ.நா. மூவர் குழு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் இந்தியா தோற்கடித்தது. ஆனால், இலங்கையில் அமைதியை நிலைநாட்டியதாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வெற்றி பெறச் செய்தது.

கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளியான ராஜபட்சவை திரும்ப திரும்ப இந்தியாவுக்கு அழைத்து கொண்டாடுகிறது. இது தொடர்ந்தால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பங்காளி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தியும், ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை உலகத்துக்கு காட்டவும் ஏப்ரல் 25-ம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

No comments: