Tuesday, April 12, 2011

திமுக அரசுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்.


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தாமல் பார்த்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா உறுதி அளித்த மறுநாளே தமிழக மீனவர் ஒருவர் மரணமடைந்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்கும்போது, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும். என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

இம்மாதம் 2-ம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், மாரிமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய நான்கு மீனவர்கள் ஊர் திரும்பாத சூழ்நிலையில், அண்மையில் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும், மற்ற இரு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்ற செய்தியையும் கேட்டு நான் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளேன்.

இந்தச் செயல் இலங்கை கடற்படையினரின் சதிச் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, வழக்கம் போல கடிதம் எழுதி காலத்தைக் கடத்தாமல், கரை திரும்பாத மீதமுள்ள இரு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித ஆபத்துமின்றி அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசையும், தி.மு.க. அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.

இறந்துபோன தமிழக மீனவர்கள் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


No comments: