Tuesday, April 12, 2011

தி.மு.க.வை வீழ்த்திவிட- அழித்துவிட முடியாது : கருணாநிதி பேச்சு.


தி.மு.க.வை வீழ்த்திவிட- அழித்துவிட முடியாது: திருவாரூர் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நேற்று மாலை திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

நான் திருவாரூர் மேடையில் எத்தனையோ கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன். எத்தனையோ விழாக்கள், வைபவங்கள் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டு உங்களோடு அளவளாவியிருக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு மணவறைக்கு வந்த புதுப்பெண்ணைப் போல நான் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். காரணம், மற்றவர்களுக்கெல்லாம் ஆதரவு கேட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களை ஒன்றல்ல இரண்டல்ல பல தேர்தல்களில் சந்தித்திருக்கிறேன். என்னை 1957ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்கள் நீ தேர்தலிலே போட்டியிடு என்று ஆணையிட்ட போது, நாகப்பட்டினம் தொகுதியில் நான் நிற்கிறேன் என்று சொன்னபோது, அண்ணா சொன்னார்- "வேண்டாம். நீ அங்கே நிற்பதாக இருந்தால் உன்னுடைய சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் தான் நிற்க வேண்டும்.

அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டு விட்ட காரணத்தால் குளித்தலையிலே நில்'' என்றார். அன்று முதல் இன்று வரை அண்ணா பேச்சுக்கு என்றைக்குமே எதிர் பேச்சு பேசாத நான் சரி என்று ஒத்துக் கொண்டு குளித்தலையிலே போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதற்கு பிறகு தொடர்ந்து 11 முறை நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னை அனுப்பி வைத்தால் 12-வது முறையாக சட்டமன்றத்திற்கு என்னை நீங்கள் அனுப்பி வைத்ததாக பொருள்.

12 என்பது தஞ்சை மாவட்டத்திலே மிக முக்கியமான எண். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தான் மாமாங்கம் வரும். மாமாங்கத்தை ஞாபகப்படுத்தும்போது உங்களுக்கு என்ன நினைவு வரும் என்று நான் ஞாபகப்படுத்த விரும்பவில்லை; அதை விட்டு விடுகிறேன். இந்தத் திருவாரூரில் இப்போது நோயுற்று நலிவுற்று மேடையிலே என்னை வா என்று அழைத்தாரே தென்னன் அவரோடு விளையாடிய தெருதான் இந்த கீழவீதி. அவர் மாத்திரமல்ல என்னோடு படித்த பார்ப்பன மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கீழ வீதியிலே என்னோடு சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள். அவர்களிலே பலர் இன்றைக்கு இல்லை.

ஆனால், அவர்களுடைய நினைவு என்றைக்கும் எனக்கு இருக்கும். அரும்பு பிராயத்திலே பள்ளிக்கூடத்திலேயே அய்யாவினுடைய கொள்கை, அண்ணாவினுடைய இலட்சியம் இவைகள் மனதில் பதிந்து - நான் சுயமரியாதைக்காரனாக மாணவப் பருவத்திலேயே என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். இப்பொழுதும் சுயமரியாதைக்காரன்தான். சுயமரியாதைக்காரன் என்ற காரணத்தால்தான் நான் ஆத்திகர்களுக்கோ பக்தர்களுக்கோ யாருக்கும் எந்த நேரத்திலும் எந்தத் தீங்கும் இழைப்பவன் அல்ல; கொள்கை வேறு, ஆக்கம் வேறு. திருவாரூர் தேர் எத்தனை ஆண்டு காலமாகிவிட்டது அது செய்யப்பட்டு. அது ஓடாமல் கிடந்ததும் உண்டு.

ஏறத்தாழ 30 ஆண்டு காலம் அந்தத் தேர் ஓடாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி நான் சட்டமன்றத்திலே முதலமைச்சராக வீற்றிருந்தபோது- இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன்- தம்பி காளிமுத்து எதிர்க்கட்சியிலே இருந்தார். எம்.ஜி.ஆர். கட்சியிலே அப்போது அவர் இருந்தார். அவர் என்னைப் பார்த்து, "தேரோட்டம் இன்றைக்கு திருவாரூரில் நடக்கிறதா?'' என்று கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று பாடினீர்களே இன்றைக்கு அந்தத் தேரோட்டத்தை அனுமதிக்கிறீர்களா என்று கேட்டார். நான் சொன்னேன், இப்பொழுது தேர் ஓடுகிறது. நாங்கள் அனுமதிக்கிறோம்.

நானே அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறேன் என்றேன். உடனே கேட்டார் அவர், அது எப்படி? அன்றைக்கு மாணவர் பருவத்திலே "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று கேட்டீர்களே இப்பொழுது என்ன ஆயிற்று. நான் அந்தப் பாட்டை எழுதும் பொழுது ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவித்தார்கள் அந்த ஆட்சியில், அவர்களெல்லாம் இன்றைக்கு நல்ல முறையில் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். ஆகவேதான், "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று கேட்டது. அந்த மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த காலத்திலே- இன்றைக்கு அந்த மக்கள் ஏங்கித் தவிக்கவில்லை.

ஆகவே தேர் ஓடுவதில் தவறில்லை. அது மதவாதிகளுடைய கொள்கை- ஆத்திகர்களுடைய கொள்கை- அதை நான் தடுக்கமாட்டேன், எதிர்க்கமாட்டேன் என்று குறிப்பிட்டேன். சொல்வதற்கு காரணம், ஆட்சி வேறு; ஆட்சியாளர்களுடைய கொள்கை வேறு. எனவே இப்பொழுதும் ஆரூரிலே வாழ்கின்ற ஆன்மீக மக்களுடைய மனதை நான் புண்படுத்தவில்லை. எதிர்காலத்திலேயும் புண்படுத்த மாட்டேன் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அவர்களாகவே புரிந்து கொண்டு தெளிவடைய வேண்டுமேயல்லாமல், பகுத்தறிவு என்பது பாலைப் போல, தேனைப் போல ஊட்டப்படுகின்ற ஒன்றல்ல. பகுத்தறிவு என்பது பரப்பப்படுவது.

அதை ஏற்றுக் கொள்கிற மனிதர்கள் பகுத்தறிவுவாதிகளாக மாறுகிறார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னாலே நாங்கள் அதை திணிக்கின்ற வகையிலே என்றைக்கும் நாங்கள் ஈடுபட்டதில்லை. அதனால் சிலவற்றுக்கு சட்டம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபடுகின்ற கோயில்களில் எல்லோரும் சென்று அந்த கோயிலிலே வழிபடவேண்டும்.

அதிலே சாதி வேறுபாடு கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அந்தக் கருத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே இன்றைக்கும் நாங்கள் அமல்படுத்தி வருகின்றோம். கடைப்பிடித்து வருகின்றோம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கடவுளுக்கு எதிரி அல்ல; ஒருவேளை வேண்டுமானால் கடவுள் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். நாங்கள் கடவுளுக்கு எதிரி அல்ல.

என்னைக் கேட்டார்கள், நீங்கள் கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்ட போது நான் சொன்னேன்; கடவுளை நான் ஏற்றுக் கொள்வது முக்கியமல்ல, பிரச்சினையே அது அல்ல. கடவுள் என்னை கொள்கிற அளவுக்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் பிரச்சினை. எனவே ஆத்திக- நாத்திக விவகாரம் அந்த அளவோடு என்னைப் பொருத்தவரையிலே முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒன்று.

ஆனால் ஒரு மனிதனுடைய சுயமரியாதையை- ஒரு மனிதனுடைய தன்மானத்தை குலைக்கின்ற எந்த ஒன்றையும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏற்றுக் கொள்ளாது. அந்தக் கழகத்திலே ஒரு சிப்பாயாக இருக்கின்ற நானும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். பெரியாரின் அரவணைப்பு நான் தொண்டனாக இருந்தபோது அந்தக் காலத்திலே கான்பகதூர் கலிபுல்லா சாஹிப் அவர்கள் தலைமையில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநாடு திருவாரூரிலே விஜயபுரத்தில் நடந்தபோது அந்த மாநாட்டினுடைய தொண்டர் படையிலே நான் ஒருவனாக இருந்தேன்.

முஸ்லிம் லீக் மாநாட்டினுடைய தொண்டர் படையில் நான் ஒருவனாக இருந்தேன். அதை அடுத்துதான் தந்தை பெரியாருடைய பழக்கமும், நட்பும் பரிவும், அவருடைய பாராட்டுதலும் அவருடைய அரவணைப்பும், அதே போல அறிஞர் அண்ணாவுடைய அன்பும், பாசமும், பற்றும் என்னை பிணைத்துக் கொண்ட காரணத்தால் நான் இந்த இயக்கத்தின் முன்னணி பிள்ளைகளில் ஒருவனாக ஆனேன்.

மத்திய அரசிலே சேது சமுத்திரத்திட்டம் என்ற மகா உன்னதமான திட்டத்தை நிறைவேற்ற அண்ணா காலத்தில் இருந்து தொடங்கி அதற்கான ஆயத்தப் பணிகள் எல்லாம் நடைபெறும்பொழுது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியே ஆக வேண்டும், அது இராமருக்கு ஆகாது என்று சொன்னார்கள். இராமர் எங்கும் வந்து சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை உலகத்தின் உச்சத்தில் உட்கார வைக்கும் என்று பொறாமை கொண்டவர்கள்தான் வேண்டுமென்றே இராமர் மீது பழியை சுமத்தி, இராமர் இந்த பாலத்தை வேண்டாம் என்கிறார் என்றெல்லாம் சொல்லி அந்த பாலத்தினுடைய பணி இன்றைக்கு நின்று போய்விட்டது.

நான் உங்களுக்குச் சொல்லுவேன், இந்தத் தேர்தலிலே நானும் தி.மு.கழகமும் வெற்றி பெற்றால் நாங்கள் மத்தியிலே இருக்கிற அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்போம். அது தம்பி பாலுவினுடைய அரிய முயற்சியினால் அந்தத் திட்டம் நிறைவேறி எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலே எல்லா நாடுகளுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையிலே அது விளங்கும் என்ற அந்த நிலையையும் நான் உங்களுக்கு இந்த கூட்டத்திலே உறுதியாக அறிவிக்க விரும்புகின்றேன்.

இவைகளையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ எங்களைப் போன்ற சில பேருக்கு பதவி கிடைக்கும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட கழகம் அல்ல. எங்களைப் போன்ற சிலர் செத்து மடிந்தாலும் கவலையில்லை, எங்களுடைய மொழிக்கு தகுதி வேண்டும், எங்களுடைய மொழிக்கு பெருமை வேண்டும், எங்களுடைய தமிழுக்கு இப்போதுள்ள சீரும் சிறப்பும் மேலும் பெருகிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்தக் கழகத்தை வீழ்த்த வேண்டுமென்று திராவிட இயக்கத்தின் உணர்வையே பொசுக்கி விட வேண்டும், அழித்து விட வேண்டு மென்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாலும் கூட, முடியாது. ஏனென்றால் "திராவிட'' என்ற அந்தச் சொல்லை நானோ அல்லது என்னை உருவாக்கிய தந்தை பெரியாரோ உருவாக்கியதல்ல. "திராவிட'' என்ற சொல் நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்ற சொல். "நீராரும் கடலுடுத்த'' என்ற தமிழ்த் தாய் வாழ்த்திலே கூட, "திராவிட'' என்ற சொல் வருகிறது. "திராவிட'' என்ற சொல் தேசிய கீதத்தில் "திராவிட உத்கல வங்க'' என்று வருகிறது. எனவே எவராலும் "திராவிட'' என்ற சொல்லை அகற்ற முடியாது.

அதனால் தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தக் கழகங்களுக்குப் பிறகு, புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்களோ- நாளைக்கு ஒரு கட்சி- காலையிலே ஒரு கட்சி- மாலையிலே ஒரு கட்சி- அப்படி கட்சி ஆரம்பிக்கின்ற யாரும் திராவிட என்ற இந்த அடைமொழியை சேர்த்துத் தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

அவர்கள் "திராவிடத்தை'' ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ- "திராவிடத்தை'' அவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ- "திராவிட'' என்ற சொல்லை மதிக்கிறார்களோ இல்லையோ- நம்மைத் தாக்குவதற்காக "திராவிட'' என்ற சொல்லை இழித்தும் பழித்தும் பேசியவர்கள் எல்லாம் கூட இன்றையதினம் அந்தச் சொல்லை தாங்கள் ஆரம்பிக்கின்ற கட்சிகளுக்குப் பயன்படுத்துகின்ற நிலையை நாட்டில் பார்க்கிறோம்.

அதை நான் குறை சொல்லவில்லை. அந்த நிலை வளரட்டும். எப்படியோ எங்கள் "திராவிடம்'' வளர்ந்தால் சரி. திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தக் கழகத்தை வீழ்த்திவிட - அழித்து விட யாராவது முனைவார்களேயானால், முனைபவர்கள் தான் அழிவார்களே தவிர, இந்த இயக்கம் அழியாது என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு இதை அறிவுரையாக, எச்சரிக்கையாகக் கூட அல்ல, அறிவுரையாகச் சொல்ல விரும்புகிறேன். இதிலும் ஒரு போட்டி என்றால்- வெறுப்பின் அடிப்படையிலே அந்தப் போட்டி இருக்கக் கூடாது.

இலக்கியப் போட்டி, காவியப் போட்டி, கலைப் போட்டி, கவிதைப் போட்டி- அதைப் போலத் தான் அரசியலில் இருக்கிற போட்டிகளும் அமைய வேண்டும். இன்றைக்குக் கூட இந்தத் தேர்தலிலே நானும் எதிர்க்கட்சி நண்பரும் போட்டியிடுகிறோம் என்றால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டல்ல.

அப்படி இருக்கக் கூடாது. இந்தத் தொகுதிக்கு யார் நன்மைகளைச் செய்வது, யார் இந்தத் தொகுதியை கவனிப்பது, யார் இந்தத் தொகுதியிலே இருக்கின்ற மக்களுக்கு அனுசரணையாக இருப்பது என்கின்ற அந்தப் போட்டியே தவிர வேறல்ல. நாளைக்கு நானே கூட ஒரு வேளை மீண்டும் முதல்-அமைச்சராக உங்களுடைய அன்பால், அருளால் ஆகிவிட்டால் வேறொரு தொகுதியிலே நின்று வெற்றிப் பெற்று வருகின்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை- அவர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆயிற்றே என்று நான் வெறுக்க மாட்டேன்.

அவர்களையும் அனுசரித்து, அவர்களுக்கும் நிலைமைகளை எடுத்து விளக்கி, திருவாரூர் பகுதியிலே, இந்தத் தொகுதியிலே இன்னும் என்னென்ன வேலைகள் நடைபெற வேண்டும், இதுவரையில் நடைபெற்றுள்ள சாதனைகள் போதுமானவைகளா? பாதாளச் சாக்கடை ஆரம்பிக்கப்பட்ட முக்கால் பகுதியிலே நிற்கிறது, இன்னும் கால் பகுதி நிறைவேற்றப்பட வேண்டும், அதற்கு ஒத்துழைப்பை நல்கக் கோருவேன்.

என்னோடு சண்டை போட்டவர்கள் - சண்டை போட்டவர்கள் அல்ல, என்னோடு போட்டி போட்டவர்களைக் கூப்பிடாமல் தான் இதைச் செய்வேன் என்று நான் எந்தக் காலத்திலும் அவ்வளவு ஜனநாயகம் தெரியாதவனாக இருக்க மாட்டேன். எல்லோரையும் அனுசரித்து, எதிர்க்கட்சியையும் மக்கள் கட்சி தான், அவர்களும் மக்களுக்காகப் பாடுபடுகிறவர்கள்தான் என்றெண்ணி அவர்களையும் சேர்த்துக்கொண்டு தான் திருவாரூர் தொகுதிக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வேனே அல்லாமல், நீ தான் என்னோடு போட்டி போட்டு தோற்று விட்டாயே, நீ இந்தப்பக்கம் வராதே என்று சொல்லுகின்ற அளவிற்கு அற்பப்புத்தி படைத்தவனாக நான் இருக்க மாட்டேன்.

எல்லோரையும் அணைத்துக் கொண்டு இந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவேன் என்ற உறுதியை உங்களுக்கெல்லாம் அளிக்கின்றேன். நான் மிகச் சாதாரணமானவன். இன்றைக்கு முதல்- அமைச்சராக இருந்தாலும் கூட நான் மிகச் சாதாரணமானவன். சட்ட மன்றத்திலே ஒரு நாள், நான் முதல்- அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, எதிர்த்தரப்பிலிருந்து ஒரு நண்பர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நண்பர் இது "மூன்றாம் தர சர்க்கார்'' என்று சொன்னார்.

உடனே என்னுடைய தோழர்கள் எல்லாம்- சட்டமன்றத்திலே எம்.எல்.ஏ.க்களாக இருந்த தோழர்கள் எல்லாம் எழுந்து என்ன சொன்னாய்? என்ன சொன்னாய் என்று ஆத்திரத்திலே குதித்தார்கள். நான் அவர்களையெல்லாம் கையமர்த்தி விட்டு சொன்னேன்- யாரும் பதட்டப்படக் கூடாது, அவர் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லை. உண்மையைத் தான் சொன்னார். நாம் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மையைத் தான் சொன்னார். இது மூன்றாம் தர சர்க்கார் என்றார்.

பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று சொல்லப்படுகிற இந்த நான்கு சாதிகளில் அவர் மூன்றாம் தர சர்க்கார் என்று சொல்லும் போது, அதை விட இது நான்காம் தர சர்க்கார் அதாவது சூத்திர சர்க்கார் என்பதைக் குறிப்பிடுவதற்காக சொல்லியிருக்கிறார். அதற்காக நாம் பெருமையடைய வேண்டுமே தவிர அவரைப் பற்றித் தவறாக யாரும் கருதக் கூடாது என்றேன். இதைச் சொல்லி இது பத்திரிகையிலே வந்த அடுத்த நிமிடம் திருச்சியிலிருந்து இளவல் வீரமணி அவர்கள் மூலமாக தந்தை பெரியார் இதைக் கேள்விப்பட்டு, எனக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக் கூறினார்.

உனக்கு எவ்வளவு துணிவு, சட்டசபையிலேயே இது சூத்திர ஆட்சி என்று ஒப்புக் கொண்டு பேசியிருக்கிறாயே, எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பாய் என்றார். எல்லாம் உங்கள் கருணையால் வந்தது அய்யா என்று நான் சொன்னேன். என்னை காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவி, தியாகத் திருவிளக்கு, சோனியாகாந்தி அவர்கள் என்னைப் பாராட்டி- தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக இருக்கிறது என்று சொல்கின்ற அளவிற்கு என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தருகின்ற ஆற்றலால்- நீங்கள் வழங்கியுள்ள சக்தியால் செய்திடுகிறேன். அதைப் போல- நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னைப் பாராட்டியிருக்கிறார் என்று பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது.

இப்படி வட புலத்திலே உள்ள பெரிய மத்திய அமைச்சர்களின் பாராட்டுகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எங்களைத் தொட்டு, முத்தமிட்டு, தவழவிட்டு, எங்களைத் தாலாட்டி, அந்தத் தாலாட்டோடு கலந்துட்டிய தமிழ் உணர்வு தான்- சுயமரியாதை உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்பதை எடுத்துக் கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.



No comments: