Thursday, March 31, 2011

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வாக்குகள் இல்லாத நிலை உருவாக வேண்டும்: சீமான்

காரைக்குடி காந்தி திடலில் நேற்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் காங்கிரசை எதிர்த்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் பேசியதாவது:-

காங்கிரஸ் தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று பகைவன். அதை அறிவு ஆயுதம் ஏந்தி வீழ்த்த வேண்டும். சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், உணவு, உடை, உறைவிடம் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக மக்களை ஏங்கி தவிக்க வைத்துள்ளது காங்கிரஸ் அரசு. இலவசங்களை கொடுத்தும் அடிமையாக்கி உள்ளது. கல்வி, மருத்துவம் போன்றவற்றில் இலவசம் தேவைதான். ஆனால் கல்வி மருத்துவம் போன்ற துறைகளை தனியாருக்கு கொடுத்துள்ளனர். மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது.

நம் நாட்டில் ஒருவேளை உணவின்றி ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து வருகின்றனர். 110 கோடி மக்களை கொண்ட நம் நாட்டில் 40 கோடி மக்கள் ஒரு வேளை உணவு மட்டுமே உண்கிறார்கள். உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்து அந்நிய முதலாளிகளுக்கு கொடுக்கிறார்கள். நமது நாட்டை உலக நாடுகளின் சந்தையாக்கி உள்ளது காங்கிரஸ் அரசு. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் 100 ஆண்டுகளுக்கு வரி இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்.

சொந்த நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்து வருகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த முத்து கொலை வழக்கில் இதுவரை போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. தமிழ் தேசிய இன உரிமையை பற்றி பேசினால் இந்திய இறையான்மைக்கு எதிரானது என்கிறார்கள். இலங்கையில் 1 லட்சத்து 75 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு தமிழர்கள் அரைவயிற்று கஞ்சியுடன் வெட்ட வெளியில் வாழ்ந்து வருகிறார்கள் இதற்கு காரணம் காங்கிரஸ் அரசு.

காங்கிரசை வீழ்த்திட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கும் இல்லை, போக்கும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments: