Wednesday, August 10, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்உற்பத்தி தொடங்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்உற்பத்தி தொடங்கும்- வளாக இயக்குனர் தகவல்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்ததில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணி ரஷிய நாட்டு உதவியுடன் நடைபெற்று வருகிறது. முதல் அணு உலை செயல்படுவதற்காக இறுதிக் கட்டபணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் வெப்ப நன்னீர் சோதனைஓட்டம் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இதுவரை நடந்த சோதனைகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளன. இந்த சோதனை குறித்த அறிக்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விரை வில் அனுப்பப்படும். ஆணையத் திடமிருந்து அனுமதி கிடைத் ததும் 2மாதத்தில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும்.

பின்னர் பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு 3 மாதத்திற்குள் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் அணுஉலை மூலம் மின்உற்பத்தியை தொடங்கு வதற்கான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. முதல் அணுஉலை செயல்படத்தொடங்கிய 7 அல்லது 8 மாதத்திற்குள் இரண்டாவது அணுஉலை மின்உற்பத்தியை தொடங்கும்.

இதே வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகள் தொடங்க போதிய இடவசதி உள்ளது. இந்த அணு உலைகளை தொடங்குவதை அரசு கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டு உள்ளது. அதற்கு தேவையான விஞ்ஞானிகள், ஊழியர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தமாத இறுதியில் அணுஉலையை சுற்றி உள்ள கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட கலெக்டருடன் கலந்துபேசி அதற்கான தேதி அறிவிக்கப்படும். முதல் அணுஉலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை நாங்கள் கூறஇயலாது.

எனினும் முதல் இரண்டு அணு உலைகள் செயல் படத்தொடங்கும் போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரமும், தென்மாநிலங்களுக்கு ஏனைய மின்சாரமும் பகிர்ந்து அளிக்கப்படலாம். அணு மின்நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு கருவிகள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments: