Monday, July 25, 2011

பொறுப்பிலாத தபால்காரரால், மருத்துவ படிப்பை இழந்த மாணவி !



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாச்சூர் கிராமம், மழவராச்சி என்ற கிராமத்தில் இருக்கும் கோவிந்தராஜ், மகள் பிரியா. இவர் பாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு தேர்வில் 1040 மதிப்பெண் பெறுள்ளார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பிரியா, பொறியியல் துறையில் சேர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத காரணத்தால், மருத்துவம் சார்ந்த படிப்பிற்காக பி.எஸ்.ஸி நர்சிங் படித்தால் செலவும் குறைவாக இருக்கும், படித்து முடித்தவுடன் வேலையும் கிடைக்கும் என்று பிரியாவின் குடும்ப நண்பர்கள் பலரும் சொன்னதால் பி.எஸ்.ஸி நர்சிங் படிப்பதற்கு வினப்பித்திருந்தார் பிரியா.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுரியில் ஜூலை 20ம் தேதி, மதியம் இரண்டு மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படியும், இரண்டு மணி கலந்தாய்வுக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வரும்படி, சென்னை பாராமெடிக்கல் கோர்ஸ் தேர்வு கமிட்டியிடமிருந்து, பிரியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், தெக்கூர் பஞ்சாயத்து கோட்டைத்தெரு அஞ்சல் அலுவலகத்துக்கு, 18ம் தேதி காலையில் பிரியாவுக்கு போய்ச் சேரவேண்டிய கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதம் 18ம் தேதி மதியம் பிரியாவின் வீட்டில் கொடுத்திருக்க வேண்டும், அல்லது அதற்க்கு அடுத்தநாள் 19௦ம் தேதி கண்டிப்பாக பிரியாவிடம் சேர்பித்திருக்க வேண்டும்.

ஆனால், பொறுப்பில்லாத போஸ்ட்மேன், பிரியாவின் வீட்டுக்கு அந்த கடிதத்தை 22ம் தேதி கொண்டுபோய் கொடுத்துள்ளார். 20ம் தேதி கலந்தாய்வுக்கு வரச்சொன்ன கடிதத்தை 22ம் தேதி கொண்டுபோய் கொடுத்துள்ளார் கடமையுணர்ச்சி இல்லாத தபால்காரர்.

ஏன்..? இப்படி தாமதமாக கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு தபால்காரரிடமும், போஸ்ட்மாஸ்டரிடமும் முறையான பதில் கிடைக்கவில்லை.

நர்சிங் படிப்பதற்கு இருந்த வாய்ப்பை இழந்த பிரியா, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துவிட்டு, அஞ்சல்துறை மீது வழக்கு போட தயாராகி வருகிறார்.

No comments: