Monday, July 25, 2011

ராசா சொல்வது பொய்... நான் எந்த அனுமதியும் தரவில்லை ! - ப.சிதம்பரம்.



2 ஜி விவகாரத்தில் அனைத்தும் பிரதமர் முன்னிலையில் நடந்ததாகவும், டிபி ரியாலிட்டியின் பங்குகளை மாற்ற அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே அனுமதி அளித்தார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா கூறியுள்ளதை மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, இன்றைய விசாரணையின்போது, "யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படிதான்.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டுள்ளனர்.

ப.சிதம்பரம் மறுப்பு:

இந்த நிலையில், ராசா கூறியது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம் பங்குகளை விற்க நான் அனுமதி தரவில்லை, என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

2007ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது, என் பரிசீலனைக்கு வந்தது டிபி ரியலிட்டி பங்குகள் விற்பனையல்ல. யுனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு புதிய டெலிகாம் நிறுவனங்கள் இருக்கிற பங்குகளை விற்கின்றவா அல்லது புதிய பங்குகளை வெளியிடுகின்றனவா என்பதை மட்டுமே நான் பரிசீலித்தேன்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே, 2ஜி லைசென்சுக்கான ஆரம்பக் கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் நிதியமைச்சகம்தான் ஏலம் விட்டு அதிக நிதியை ஈட்டலாம் என யோசனை கூறி வந்தது.

ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் முதலில் 2ஜி லைசென்ஸ் பெற்றுக் கொண்டன. அதன் பிறகே புதிய/ வெளிநாட்டுப் பங்குதாரரை சேர்த்துக் கொண்டன. இதற்கு அனுமதி தந்தது தொலைத் தொடர்புத் துறையாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பதை மட்டுமே நிதியமைச்சகம் பரிசீலித்தது. இதைத் தெரிந்து கொள்ள பிரதமரும் விரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பிறகே அந்த நிறுவனங்களில் புதிய கூட்டாளிகள் இணைந்தனர். புதிய பங்குகள் வெளியீடு மூலம் அவர்களைச் சேர்த்துக் கொண்டன ஸ்வான், யூனிடெக் என்பதையும் நான் பிரதமருக்கு விளக்கினேன் என்று கூறியுள்ளார்.

No comments: