Monday, July 4, 2011

மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் தெருவிலேயே பிரசவித்த பெண்கள்.

உத்தரபிரதேசம் கன்னௌஜில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த மம்தா என்னும் பெண்ணை பணம் இல்லாததால் பிரசவம் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்தப் பெண் தெருவோரம் பிள்ளையைப் பெற்றெடுத்தார். ஆனாலும் குழந்தை நலமாக உள்ளது.

இது குறித்து மம்தாவின் கணவர் சுஷில் கூறியது,

மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் என்னிடம் ரூ. 1500 லஞ்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். உடனே அவர்கள் என் மனைவியை கவனிக்காததோடு, என் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வேறு மருத்துவமனைக்கு செல்வதற்காக, நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்து வர போயிருந்தேன்.. ஆனால் அதற்குள் தெருவோரமாகவே என் மனைவி குழந்தையைப் பெற்றெடுத்துவி்டடார். உடனே நாங்கள் குழந்தை பிறந்துவிட்டது, இப்பொழுதாவது மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சென்றோம். ஆனால் அந்த மருத்துவர் 1 மணி நேரமாக வெளியே வரவேயில்லை.

ஆனாலும், எங்களிடம் பணம் ரூ.1,500 கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். நாங்கள் பணம் கட்டும் வரை எனது மனைவிக்கு ஒரு படுக்கை கூட கொடுக்கவில்லை என்றார்.

செவிலியர்களின் அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்ற பெண்.

இதே போன்ற அவலம் கடந்த நவம்பர் 20ந் தேதி தேனி மாவட்டம் ராயப்பன் பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடந்துள்ளது. .

ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மனைவி ரெங்கம்மாள் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக தாயாருடன் வந்தார்.

அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்ஸ், டாக்டர் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

டாக்டர் வராததால் நீண்ட நேரமாக வாசலிலேயே காத்திருந்தார் ரெங்கம்மாள். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை. இந்த நிலையில் ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார்.

மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ரெங்கம்மாள்.

தகவல் அறிந்து ரெங்கம்மாளின் உறவினர்கள் குவிந்து விட்டனர். டாக்டர் வராதது ஏன்,

ஏன் ரெங்கம்மாளை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

இதைத் தொடர்ந்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சோக சம்பவம் குறித்து நாகரத்தினம் கூறுகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறி அழுதார்.

No comments: