Sunday, June 19, 2011

சிகிச்சையளிக்க தனது கருவியைக் கொண்டு வந்த அரசு மருத்துவர் - கண்காணிப்பாளருக்கும், செவிலியருக்குமிடையே மோதல்!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1400 படுக்கைகள் உள்ளன. இங்கு 1200 பேர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மருத்துவமனையில் புகார்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவு வார்டில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அறுவை சிகிச்சைஅரங்கில் நோயாளிகளுக்குத் திறம்பட சிகிச்சையளிக்க மருத்துவர் ஒருவர் தனது கிளினிக்கிலிருந்து ஒரு கருவியைக் கொண்டு வந்துள்ளார். அந்தக் கருவி மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பலன் பெற்றுள்ளனர்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அரங்கில் தவறான சிகிச்சையளித்ததால் அவர்களின் நிலை கவலைக்கிடமானது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனை அறுவை அரங்கில் வெளியிலிருந்து கருவிகள் கொண்டு வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் வெளியிலிருந்து கருவி கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிப்பது மருத்துவக் கண்காணிப்பாளர் ஜிம்லா பாலச்சந்திரனுக்குத் தெரியவந்தது. இதனால் அங்கு பணியாற்றிய செவிலியர்கள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு செவிலியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று காலை செவிலியர்கள் சங்க மாநில செயலாளர் லீலாவதி மற்றும் நிர்வாகிகள் நெல்லை அரசு மருத்துவனைக்கு வந்தனர். அவர்கள் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜிம்லா பாலச்சந்திரனைச் சந்தித்து செவிலியர் துறை மாற்றத்திற்கு விளக்கம் கேட்டனர்.

இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதுகுறித்து மாநில செயலாளர் லீலாவதி கூறுகையில், ''வெளியிலிருந்து உபகரணம் கொண்டு வந்ததாகக் கூறி 2 செவிலிய இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் கேட்ட போது எங்களை அவமரியாதையாக நடத்தினார். நாங்கள் கேட்ட விளக்கத்திற்குப் பதிலளிக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்போம். இது குறித்து சுகதாதரத்துறை செயலாளர், அமைச்சர், மருத்துவக்கல்லி இயக்குநர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜிம்லாபாலச்சந்திரனிடம் கேட்ட போது, ''மருத்துவமனைக்கும் வெளி உபகரணங்கள் கொண்டு வர அனுமதியில்லை. இதை கண்காணிக்க வேண்டியது செவிலியரின் கடமை. எனவே தான் நடந்த சம்பவத்தை மருத்துவக்கல்வி இயக்குநரிடம் தெரிவித்து அவரது ஒப்புதலின் பேரிலேயே 2 செவிலியரையும் பணியிட மாற்றம் செய்துள்ளேன். விசாரணையின் போது தங்கள் தரப்புள்ள நியாயத்தை அவர்கள் தெரிவிக்கலாம்" என்றார்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளருக்கும், செவிலியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: