Sunday, June 19, 2011

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி கடத்தல் : வாகன சோதனையில் சிக்கியது.

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி கடத்தல்: வாகன சோதனையில் சிக்கியது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து ஆசிரம உறுப்பினர் ஒருவர் காரில் பணம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசிரமம் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அங்குள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓடிகொண்டா சோதனை சாவடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது புட்டபர்த்தி சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான குவாலிஸ் கார் ஒன்று சிக்கியது. அந்த காரில் சோதனை நடத்தியபோது 2 பைகளில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி பணம் இருந்தது.

இதையடுத்து டிரைவர் ஹரிஷ்நந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சத்யசாய் டிரஸ்ட்டை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் 2 பைகளை கொடுத்து பெங்களூரில் சென்று ஒப்படைக்கும்படி கூறினார்.

புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் பிரசாந்தி நிலையத்தின் அருகே உள்ள கேண்டீனில் வைத்து இந்த 2 பைகளையும் அவர் கொடுத்தார். பெங்களூர் சென்றதும் ஒரு நம்பரை கொடுத்து போன் செய்ய சொன்னார். போனில் பேசுபவர் எங்கே வரச்சொல்கிறாரோ? அங்கே போய் பணத்தை கொடுத்துவிடு என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

அந்த உறுப்பினரின் பெயரை அவர் சொல்லவில்லை. மேலும் அந்த பையில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது என்றும் கார் டிரைவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கார் டிரைவர் ஹரிஷ்நந்தாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள அவரது அறையில் சமீபத்தில் ரூ.100 கோடி பணம், 450 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் அங்கு அவ்வளவு நகை, பணம் இல்லை. ரூ.11.56 கோடி பணமும், 98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும் மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகைகள் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

சாய்பாபாவுக்கு 180 நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஏராளமான வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர். அந்த பணம் ஏதும் கணக்கில் வரவில்லை. இந்தநிலையில் தான் காரில் கடத்திய ரூ.9 கோடி பணம் சிக்கியுள்ளது.

இதனால் சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை அபகரிக்க சிலர் திட்டமிட்டிருக்கலாம் என்று பக்தர்கள் சந்தேகிக்கிறார்கள்.

No comments: