Sunday, May 8, 2011

இந்தியாவிற்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார் : மத்திய அரசு எச்சரிக்கை.

காஷ்மீருக்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார்: மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்ததும் அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்கிறது.

இதனால் எல்லையில் இந்தியப்படை விழிப்புடன் இருந்து கண்காணிக்கிறது. சமீபத்தில் பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் பதட்டமும் அடைந்துள்ளது. இந்தியாவும் தாக்குதல் நடத்துமோ என்று அஞ்சி எல்லையில் படைகளை குவித்துள்ளது.

மேலும் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உள்ள பயிற்சி முகாம்களில் 700 முதல் 800 தீவிரவாதிகள் வரை தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மட்டும் 42 பயிற்சி முகாம்கள் செயல்படுவதை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.

அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எந்த நேரத்திலும் காஷ் மீருக்குள் ஊடுருவ காத்து இருக்கின்றனர். இதையடுத்து காஷ்மீர் உள்பட இந்திய எல்லைப் பகுதி மாநிலங்களை உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இவர்கள் அனைவரும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவார்கள்.

பாகிஸ்தான் சமீபகாலமாக இந்திய எல்லையில் பூஞ்ச் பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி ராக்கெட் குண்டுகளையும், நடுத்தர எந்திர துப்பாக்கிகளாலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பயன்படுத்தி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது பாகிஸ்தானில் வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 22, 24, மே 5 ஆகிய தேதிகளில் காஷ்மீர் எல்லையில் இதுபோன்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியது. இதனால் இந்திய ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: