Thursday, April 14, 2011

ஆ ராசாவை பல்வா, அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத்பவார் ! - நீரா ராடியா.


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள ஷாகித் பல்வாவின் டிபி ரியலிட்டி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், ஆ ராசாவை பல்வா மற்றும் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் பவார்தான் என்றும் நீரா ராடியா மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கார்ப்பரேட் தரகர் நீராராடியாவுக்கு தொடர்பு இருப்பது வெளியாகி, பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய அத்தனை பேரிடமும் சிபிஐ மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பலகட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. அதில் பல்வேறு தகவல்களை சி.பி.ஐ.யிடம் நீரா ராடியா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மும்பை தொழில் அதிபர் ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் நடத்திய ஸ்வான் டெலிபோன் நிறுவனம் மூலம் இவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கிருப்பது தெரியவந்தது.

ஷாகித் பல்வாவுக்கு டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஏற்கனவே புகார்கள் வந்தன. ஆனால் இதை சரத்பவார் மறுத்து வந்தார்.

ஆனால் சரத்பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மைதான் என நீராராடியா சி.பி.ஐ.விடம் தெரிவித்துள்ளார்.

ஷாகித் பல்வா நடத்திய டி.பி.ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சரத்பவாரும், அவரது குடும்ப உறுப்பினர்களும்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர் என்றும் நீராராடியா கூறியுள்ளார். மேலும், ஆ.ராசாவை ஷாகித் பல்வா, அனில் அம்பானி ஆகியோருக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத் பவார்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments: