Saturday, April 2, 2011

சென்னையில் 5ம் தேதி கருணாநிதியுடன் சோனியா பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 5ம் தேதி முதல்வர் கருணாநிதியுடன் சென்னையில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகவும் திமுக கூட்டணிக்காகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சோனியா பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது.

அதேபோல பாஜக தரப்பில் அத்வானியோ அல்லது முக்கிய தலைவர்களோ தமிழகம் பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சுஷ்மா சுவராஜ் மட்டுமே வந்து சென்றனர். அவரது பிரச்சாரமும் தமிழக வாக்காளர்களிடம் எடுபடவில்லை.

இந் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய சோனியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி சென்னை வரும் அவர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் கருணாநிதியும் இக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கருணாநிதி இன்று வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து விட்டு சென்னை திரும்புகிறார். நாளை ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள் வட சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி தென் சென்னை தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் தென் சென்னையில் சோனியாவுடன் ஒரே மேடையில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

No comments: