Tuesday, March 29, 2011

ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ் - விஜயகாந்த் கடும் தாக்கு.

இரு ஜாதிகளை மோத விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய்தான் டாக்டர் ராமதாஸ் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.

தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. பாமக அடிக்கடி கூட்டணி மாறுவதை விமர்சித்து விஜயகாந்த் பேசி வருவதால் கடுப்பாகியுள்ளனர் அக்கட்சியினர். இதையடுத்து விஜயகாந்த்துக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸும், காடுவெட்டி குருவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் தர்மபுரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸை இன்னும் கடுமையாக தாக்கிப் பேசினார் விஜயகாந்த்.

சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?.

ஜாதி பேதத்தை விட்டொழியுங்கள். பணத்தில் இருக்கிறதா ஜாதி, நமது வியர்வையில் இருக்கிறதா ஜாதி. நாம் விடும் மூச்சில் இருக்கிறதா ஜாதி. பிறகெதற்கு அதைப் பிடித்துக் கொண்டு சமூகங்களை மோத விட்டு ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?.

அந்தக் கூட்டணியின் தலைவர்கள் எல்லாம் மேடையில் உட்கார்ந்து கொண்டு பார்த்தீர்களா எங்களது ஒற்றுமையை என்கிறார்கள். நான் கேட்கிறேன், தைரியம் இருந்தால் இப்படி, என்னைப் போல மக்களிடையே வந்து நில்லுங்கள் பார்க்கலாம். வர மாட்டார்கள். ஏன் என்றால் வந்தால் நீங்கள் கேள்விகேட்பீர்களே. அந்த பயத்தில் என்றார் விஜயகாந்த்.

No comments: