Tuesday, March 29, 2011

அதிமுகவை ஆதரிக்க விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தை கலைத்து உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த மன்றத்தினர் விஜய்யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம் என்று கூறினார்.

No comments: