Tuesday, March 29, 2011

146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் கருத்துக் கணிப்பு.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கடந்த பல ஆண்டுகளாகவே துல்லியமாகச் சொல்லி வரும் இதழ் நக்கீரன்.

இந் நிலையில் 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. (இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்ததும், திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தியுள்ளனர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து சர்வே நடத்தியுள்ளனர்.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

தனது கருத்துக் கணிப்பின் முடிவுகளை கடந்த 4 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டுள்ளது. முதல் இதழில் 50 தொகுதிகளுக்கான முடிவுகளும், இரண்டாவது இதழில் 61 தொகுதிகளின் முடிவுகளும், மூன்றாவது இதழில் 57 தொகுதிகளுக்கான முடிவுகளும், 4வது இதழில் 66 தொகுதிகளின் முடிவுகளையும் நக்கீரன் வெளியிட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஆதரவு, யார் அடுத்த முதல்வர் என்று அந்தத் தொகுதி மக்கள் நினைக்கின்றனர், யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாத மக்கள் எண்ணிக்கை, முக்கிய கட்சி வேட்பாளர்களின் பலம், பலவீனம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் கிடைக்கும் லாபம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நக்கீரன் வழங்கியுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் உள்ளன.

இந்த இடத்தில் தான் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி மிக மிகக் கடுமையான உள்ள நிலையில் மிகக் குறைவான வாக்குகள் தான் என்றாலும் வைகோவின் ஆதரவு வாக்குகள் எந்தப் பக்கம் திரும்பும் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் தலைவிதி நிர்ணயமாகவுள்ளது.

மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிந்த பின்னர் தான் அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது. மேலும் திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாயின. இதனால் தேர்தல் அறிக்கைகளாலும் வைகோவின் வெளியேற்றத்தாலும் இரு கூட்டணிகள் மீதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த அலசல் விரைவில் வெளியிடப்படும் என நக்கீரன் அறிவித்துள்ளது.

No comments: