Saturday, December 17, 2011

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம் : கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம்: கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம் - முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்க கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் இளங்கோவன் பேசியதாவது:-

இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை.

1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இது உருவானது.

எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணமாகும். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம்.

அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள் எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும். “டிஸ்மிஸ்” செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல.

மேடையில் இருக்கிற மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்- அமைச்சராக உட்கார வைக்க கூடாது.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

No comments: