Thursday, August 4, 2011

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தேசிய தரத்திற்கு இணையாக இல்லை: தமிழக அரசு.



சமச்சீர் கல்வியை அமல்படுத்த தகுந்த பாடப் புத்தகங்கள், விதிமுறைகள் இல்லாத காரணத்தால், அடுத்தாண்டு அல்லது அதன்பின் அமல்படுத்த வேண்டும், என உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் பி.பி. ராவ் கூறினார்.

சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக, விசாரணைக்கு வந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தினால் 90 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவர். அவர்களுக்காக இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். மீதமுள்ள 10 சதவீத தனியார் பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தை இந்தாண்டு பின்பற்றிவிட்டு, அடுத்தாண்டு முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என வாதாடினார்.

இதையடுத்து, நேற்று தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் வாதாடியதாவது:

சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை.

சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர்நீதி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை. மேலும், சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக் குமரன் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று அவரே கூறியுள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடமிருந்து சமச்சீர் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் தரமானவை என எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. அத்திட்டத்தை அமல்படுத்த தமிழக கல்வித் துறை ஒரே நாளில் ஒப்புதல் அளித்ததன் மூலம், சமச்சீர் கல்வி புத்தகங்கள் தேசிய தரத்திற்கு இணையானது அல்ல என்பது தெளிவாகிறது. எனவே, தரமான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, தகுந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட பின், சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பி.பி ராவ் வாதிட்டார்.

பி.பி.ராவின் வாதத்திற்கு இடையே குறுக்கிட்ட நீதிபதிகள் குழு, புத்தகங்கள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் என்ன செய்கின்றனர், எனக் கேட்டார்.

அதற்கு பதலளித்த ராவ், கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தப்படுகிறது. இதனால், அனைத்து பள்ளி மாணவர்களும் தடையில்லாமல் படித்து வருகின்றனர். சமச்சீர் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்கள் அப்படியே தொடரும்; ஆனால் தரமான கல்வியை உருவாக்கிய பின் சமச்சீர் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதம் இன்றும் தொடரும் நிலையில், இன்றோடு வாதத்தை முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரித்துள்ளனர்.

No comments: