Monday, July 18, 2011

சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்தாகுமா?



நடிகை ரஞ்சிதாவுடன் அலங்கோலமாக இருந்ததாக சர்ச்சையில் சிக்கி, தலைமறைவாகி, இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து பிடிபட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சாமியார் நித்தியானந்தாவுக்கு ஜாமீன் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடாதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அங்கு நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றார் நித்தியானந்தா.

இந்த நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாட்சிகளை நித்தியானந்தா மிரட்டுவதாகவும், கலைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் இன்று இந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை கர்நாடக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால் மீண்டும் நித்தியானந்தா கைதாகும் சூழல் ஏற்படலாம்.

No comments: