Friday, June 24, 2011

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? அரசின் மோசடி - ஒரு விரிவான அலசல்.



பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்களும் நேற்றைய தினம் (ஜூன் 23) ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஒராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.

விலை உயர்வுக்கு ஆட்சியாளர்கள் சொல்கின்ற காரணங்கள் மூன்று.

1. உலகச்சந்தையில் கச்சா எண்ணைவிலை உயர்ந்து விட்டது.

2. கச்சா எண்ணை விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.

3. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை.

எனவே விலை உயர்வை தவிர்க்கமுடியாதது என்கிறார்கள்.

இவைகள் உண்மை என்றால் கடந்த 2008ம் ஆண்டு கச்சாஎண்ணைவிலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 135 டாலருக்கு மேல் விற்றபோது 1லீட்டர் பெட்ரோல் விலை ரூ.54 மட்டுமே.தற்போது 94 டாலர் மட்டுமே,

ஆனால் 1லீட்டர் பெட்ரோல் விலை ரூ.67.22 ஆக உள்ளது. இது போக பீப்பாய் 80டாலருக்கு விற்றபோது பெட்ரோல் விலை குறையவில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்பது தவறான செய்தியாகும்.

இந்தியாவின் பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு 2010 - 11ம் நிதியாண்டில் வரி போக கிடைத்த நிகரலாபம் :

IOC க்கு 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.5294 கோடி,

HPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2142.22 கோடி,

BPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2148 கோடி,

இதன் மூலம் அரசுக்கு கிடைத்து வரி ரூ.2340.22 கோடி ஆகும்.

ஆக 2010 - 11ல் அரசுக்கும் எண்ணெய் நிறுவணங்களுக்கும் கிடைத்த நிகர இலாபம் ரூ.11,924.44 கோடி ஆகும்.

எனவே எண்ணை நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது எதிர்பார்த்த லாபத்தில் குறைவு என்பதை நஷ்டம் என்கின்றன. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச்சுமை ஏற்படுவதாக கூறுவது தனியார் எண்ணை நிறுவனங்களை வளர்த்து விடுவதற்காக சொல்லப்படுகின்ற காரணமாகும்.

உண்மையில் அரசு பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்பது அதற்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து ஒருசிறுபகுதிதான். உதரணமாக 2009- 10ம் ஆண்டுக்கான மானியமாக கொடுக்கபட்டதொகை ரூ.23.325கோடி.இதே காலகட்டத்தில் வரிகள் மூலம் அரசுக்கு கிடைத்த லாபம் ரூ.4,10, 842கோடி.

உண்மையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்?. அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் பொருட்களின் விலை நிர்ணய உரிமை கடந்த 2010 ஆண்டு ஜூலை 25 முதல் எண்ணை நிறுவனங்களே உலக சந்தைக்கேற்ப இந்திய சந்தையிலும் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற கொள்கை முடிவை இந்திய அரசு எடுத்தது.

இதன்படி ரிலையன்ஸ், எஸ்ஸார் மற்றும் ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களின் கையில் தான் விலை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது.அதனால் அவை நேர்மையற்ற முறையில் லாபநோக்கத்தோடு விலைகளை மாற்றிக் கொண்டு இருக்கின்றன.

மற்றொரு காரணம் மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு.

தற்போதைய பெட்ரோல் விலையான ரூ. 67.22ல் 31சதம் எக்சைஸ் வரியும், 17சதம் விற்பனை வரியும் போக பொட்ரோலின் அடக்க விலை ரூ.35 தான். இதில் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபமும் அடங்குகிறது. அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ரூ.67.22 க்கு பெட்ரோல் விலை விற்க்கப்படுகிறது.

உள்நாட்டுபோரும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ள பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.26க்கும், வங்கதேசத்தில் ரூ.22க்கும், சின்னசிறிய நேபாளநாட்டில் ரூ.34க்கும் விற்க்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டிய நாடுகளில் விலை குறைவாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதிக விற்க்கபடுவது ஆளும் கட்சியின் பொறுப்பற்ற செயல்காரணமாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசின் தோல்விகான காரணங்களில் ஒன்றாக மின்வெட்டு இருந்ததை போல மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை ஏற்படுத்த போகும் காரணங்களில் ஒன்றாக அமையும்.

பெட்ரோல் விலை உயர்வில் மற்றொரு புதிர் தேர்தல் நேரங்களில் மட்டும் விலை உயர்வேயில்லை என்பது.

4தமிழ்மீடியாவுக்காக அ.தமிழ்ச்செல்வன்

No comments: