Friday, June 24, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்; சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்;  சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. இந்த முறைகேடுகளுக்கு யார்-யார்? காரணம் என்று சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு மற்றும் கூட்டுக்குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. அதன் மூலம் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது.

இந்த இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாமின் ஷாகித் பல்வா ஆகிய 4 பேர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்தது. 654ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிலையன்ஸ், யுனிடெக், சுவான் டெலிகாம் ஆகிய 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த வினோம் கோயங்கா (டி.பி.ரியாலிட்டி) சஞ்சய் சந்திரா (யுனிடெக் வயர்லஸ்), அரிநாயர், கவுதம் ஜோஷி, சுரேந்திர பிபாரா (மூவரும் ரிலையன்ஸ்) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 125 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பண பரிமாற்றங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிய வந்தது.

பண பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி இரண்டாவதுகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதை துணை குற்றப்பத்திரிகை என்கிறார்கள். அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சுவான் டெலிகாமை சேர்ந்த ஆசீப் பல்வா, குசேகான், பழம்-காய்கறி நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கரீம் மொராலி ஆகிய 5 பேர் பெயர் இடம் பெற்றிருந்தது.

இவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் சதிக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தனியார் அமைப்புகள் மூலம் ஹவாலா மோசடி அடிப்படையில் பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கலைஞர் தொலைக்காட்சிக்கும் இப்படித்தான் பணம் கை மாறி உள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறி உள்ளது. எனவே தான் கனிமொழி மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்துக்கான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி சேகரித்துள்ளது.

மொரிசியஸ், இங்கிலாந்து உள்பட பல வெளிநாடுகளுக்கு குழுக்களை அனுப்பி பண பரிமாற்ற ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் அடுத்த வாரம் வெளிநாடுகளில் இருந்து வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 3-வது குற்றப்பத்திரிகையை வரும் 7-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆவணங்களில் 80 சதவீதம் தயாராக உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் சிலரது பெயர் இடம் பெறும் என்று தெரிகிறது. அதோடு சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் நடந்த விசாரணை விபரங்களும் தெரிய வரும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தகுந்த ஆதாரங்களுடன், இந்த குற்றப்பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

No comments: