Friday, June 3, 2011

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல் !


சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு ரஜினியைப் பார்த்த கமல் - இருவரும் அழுத உருக்கம்!

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, கலைஞானி கமல்ஹாசன் சந்தித்து உருக்கமாக பேசிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டதாகவும், மிகவும் நெகிழ்ச்சி யானதாக அந்த சந்திப்பு அமைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிகிச்சைக்காக ரஜினியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக ரஜினிகாந்த்தை, ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து கலங்கி விட்டாராம் கமல். மிகவும் உருக்கமாக, ஆறுதல் கூறி ரஜினியிடம் பேசிய கமல், நானும் சிங்கப்பூர் வரை கூட வரட்டுமா என்றும் கவலையுடன் கேட்டுள்ளார். இதைக் கேட்டு நெகிழ்ந்த ரஜினி, பரவாயில்லை, இந்த அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாறாக இருவரது கண்களும் பனித்துள்ளன.

இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

அதன் பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கமல், ரஜினியிடம், எனக்கு ராணாதான் போட்டி. நீங்கள் குணமடைவீர்கள், குணமடைந்து வந்து ராணாவில் நடிப்பீர்கள் என்று தைரியம் கூறி பேசியுள்ளார்.

ரஜினியை கமல் சந்தித்த இந்த உருக்கமான சந்திப்பு குறித்துதான் இப்போது கோலிவுட் முழுவதும் உணர்ச்சிகரமாக பேசி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ரஜினியை சந்திக்க யாரையுமே அவரது குடும்பத்தினர் அனுமதிக்க வில்லை. கமலே கூட பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் கமல் பெரும் வேதனையும், ரஜினி குடும்பத்தார் மீது சற்று வருத்தமும் அடைந்தார். ரஜினியைப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா என்று கூட ரஜினியின் மனைவி லதாவிடம் அவர் உரிமையுடன் கோபித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும் ரஜினி சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்பு அவரே கமல்ஹாசனை பார்க்க விரும்பியதால்தான் கமல்ஹாசன்-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

No comments: