Monday, March 28, 2011

அழகிரி குற்றச் சாட்டு - மதுரை கலெக்டர் சகாயம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்

மதுரை கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சகாயம், ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகத்தில் கூட்டணியினருடன் நேற்று அழகிரி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அதிமுகவுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 30 முதல் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார் அழகிரி.

No comments: