Friday, September 16, 2011

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளது : தணிக்கை குழு குற்றச்சாட்டு.

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளது: தணிக்கை குழு குற்றச்சாட்டு

தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்கு தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.

ஆகியவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 32 இளநிலை படிப்புகளுக்கும், 48 முதுநிலைப்பட்டப்படிப்புகளுக் கும், சுயசார்பு படிப்புகளாக நடத்த அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், குறைந்த பட்சமாக 85 மதிப்பெண்ணும், நிரந்தர அனுமதி வழங்க 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல், குறைந்த பட்ச மதிப்பெண்ணை 85-ல் இருந்து 50 ஆக குறைக்க பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தகுதி யில்லாத 111 கல்லூரிகள் இணைப்பு அனுமதி பெற்றுள்ளன. மேலும் இணைப்பு வழங்குவதற்கு அளவு கோல்களான ஆசிரியர் குழு, சோதனை கூடம், நூல கம், மற்றும் பொது வசதிகள் ஆகிய நான்கிற்கும் தனித்தனியே குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை.

இணைப்புகளுக்கான நெறிகளை தளர்த்தியதும், ஒவ்வொரு அளவு கோலுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ண யிக்காததும், இணைப்பு கல்லூரிகள் வழங்கும் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும். இணைப்பிற்கான நிபந்தனைகளை பல்கலைக்கழகம் விழிப்புடன் இருந்து தீவிரமாக செயல்படுத்தவில்லை. புதிதாக என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்தில் பாடப்பிரிவுகளை தொடங்கும் பொழுதோ, நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ அகில இந்திய தொழில் கல்வி மன்றத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் மிகவும் அவசியம்.

ஆனால், இதன் விதிகளை மீறி என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் கூடுதலாக 42 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:38 என்ற அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வலைத்தளம் சார்ந்த தொழில் நுட்ப வள ஆதாரங்களை வழங்குவதற்காக கருத்துரு செய்யப்பட்ட “அறிவுத்தர மையம்” 6 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஆனதுடன் அதற்காக செல வழித்த ரூ.6.16 கோடி வீணானது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: