Friday, July 22, 2011

ஊட்டியில் கடுங்குளிர் : சுற்றுலா பயணிகள் அவதி - தேயிலை உற்பத்தி பாதிப்பு.



நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 1100 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 269 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குறைந்த பட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியசாக உள்ளது.

இதனால் ஊட்டி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவுகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை யும் கணிசமாக குறைந்து விட்டது. நீலகிரியின் இயற்கை எழிலை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அடர்த்தியான மேக மூட்டம் காணப்படுவதால் ஊட்டியின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகளால் ரசிக்க முடியவில்லை.

காலை 7 மணிக்கு பிறகு கூட வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்ட படியே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கனரக வாகனங்களில் டீசல் உறைந்து விடுவதால் வாகனங்களை இயக்க முடியாக நிலையும் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை பகுதிகளில் தேயிலை உற்பத்தி குறையத் தொடங்கி விட்டது.

வால்பாறை வட்டாரப் பகுதிகளில் 12 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது. இந்தத் தேயிலைச் செடிகளில் நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை தேயிலை இலைகள் உற்பத்தி அதிகரித்து காணப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும்.

பின்னர் தேயிலை உற்பத்தி சற்று குறையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தபோதும் அவ்வப்போது நல்ல வெயில் அடித்துக் கொண்டு இருந்ததால் ஜூலை மாதம் 10-ம் தேதி வரை தேயிலை உற்பத்தி அதிகம் கிடைத்து வந்தது.

தற்போது வால்பாறை வட்டாரப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நல்ல பனிபொழிவும், மழையும் இருந்து வருவதால் கடந்த 1 வார காலமாக தேயிலை உற்பத்தி குறையத் தொடங்கி விட்டது.

மேலும் தேயிலை இலை களை கொப்புள நோய் மற்றும் தேயிலை கொசு தாக்கி வருவதாலும், தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு டிவிசன்களிலும் குறைந்தபட்சம் 300 கிலோ வரை தேயிலை உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தேயிலை தூள் உற்பத்தி குறைவதோடு தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் குறையத் தொடங்கும்.

No comments: