Tuesday, July 12, 2011

நம்ம ஊர் 'லுங்கி'களுக்கு ஐரோப்பாவில் செம கிராக்கி !



ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு நம்ம ஊர் லுங்கிகள் பிரபலமாகி வருகின்றன. வெயிலுக்கு படு வசதியாக லுங்கிகள் இருப்பதாக ஐரோப்பியர்கள் குஷியாக கூறுகின்றனர்.

தமிழர்களிடன் தவிர்க்க முடியாத ஒரு உடை லுங்கி எனப்படும் கைலிதான். என்னதான் படு டீக்காக பேன்ட், சட்டை போட்டு ரவுண்ட் அடித்தாலும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக லுங்கிக்குள் புகாத தமிழர்களே இருக்க முடியாது. பெர்முடாஸ்களின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் இன்னும் லுங்கிகள் மங்காப் புகழுடன் தமிழர்களைத் தழுவியபடிதான் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்து லுங்கிகள் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்துள்ளது. அங்கு கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கட்டம் போட்ட கைலிகள் படு சூடாக விற்பனையாகி வருகிறதாம்.

ஒரே ஒரு தையல், 2 மீட்டர் கட்டம் போட்ட தமிழகத்து லுங்கிகள், ஐரோப்பிய மக்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும், அது கொடுக்கும் சவுகரியங்கள் படு வியப்பையும் அளிப்பதாக உள்ளதாம். இதனால் லுங்கிகளை வாங்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு இந்திய நிறுவனம் லுங்கிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் இதற்கான ஆர்டர்களை அனுப்பி லுங்கிகளை வாங்கிக் குவிக்கிறதாம் அந்த நிறுவனம்.

இதுகுறித்து ஐஓயு என்ற அந்த நிறுவனத்தின் நிறுவனரும், கிரியேட்டிவ் இயக்குநருமான கவிதா பார்மர் கூறுகையில், இந்தியாவில் பல காலமாக பிரபமலானவை இந்த லுங்கிகள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இது புதிய உடையாக தெரிகிறது. இந்த லுங்கிகளை தற்போது நாங்கள் ஐரோப்பாவில் விற்பனை செய்து வருகிறோம்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் தருகிறோம். இங்குள்ள தேவைகளுக்கேற்ப சில மாறுதல்களை செய்தும் தைத்து வாங்குகிறோம் என்றார்.

நம்ம ஊரில் கட்டுவது போலவும் இந்த லுங்கிகளை ஐரோப்பியர்கள் அணிகிறார்கள். அதேசமயம், இதை விதம் விதமான டிசைன்களில் சட்டை போலவும் அணிகிறார்களாம்.அதற்கேற்ற வகையில் விதம் விதமான டிசைன்களில் நம்ம ஊர் லுங்கிகளை மாற்றியமைத்து விற்று வருகிறது கவிதா பார்மரின் நிறுவனம்.

ஒரு நாளைக்கு இந்த நிறுவனத்திடம் 15 கைலிகளுக்கு ஆர்டர்கள் வருகின்றதாம்.

ஸ்பெயின் நிறுவனத்திற்கு லுங்கிகளை அனுப்பும் ஆர்டரை தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது. குறிஞ்சிப்பாடியில் மட்டும் மொத்தம் 9 கூட்டுறவு கைத்தறி நிறுவனங்கள் கோ ஆப்டெக்ஸ் வசம் உள்ளன. இவர்களிடம் மொத்தம் 223 நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து கோஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் உமாசங்கர் கூறுகையில், சர்வதேச ஆர்டரைப் பெறுவதை எங்களுக்குப் புதிதல்ல. பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு நாங்கள் துணிகள் மற்றும் தைக்கப்பட்ட ஜவுளித் தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம். இந்த முறை எங்களது லுங்கிகளுக்கு நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றார்.

இதேபோல காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுக் கழகம், இத்தாலிக்கு பல்வேறு டிசைன்களிலான லுங்கிகளை ஏற்றுமதி செய்து வருகிறதாம்.

லாத்வியாவுக்கும் இவர்கள் பெருமளவில் லுங்கிகளை அனுப்பி வருகின்றனராம். இதையும் ஸ்பெயின் நிறுவனமே வாங்கி லாத்வியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிஞ்சிப்பாடிக்கும், பின்னர் சென்னைக்கும் வருகை கந்தார் கவிதா பார்மர். அப்போது 16,023 லுங்கிகளை வாங்க ஆர்டர் கொடுத்துச் சென்றார். தற்போது மொத்தம் 30,000 லுங்கிகளுக்கு கவிதாவின் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்து லுங்கிகளுக்குத்தான் நல்ல கிராக்கி உள்ளதாம். அதிலும் நீல நிறத்திலான கட்டம் போட்ட லுங்கிகளுக்குத்தான் நல்ல மவுசு உள்ளதாம். மெட்ராஸ் லுங்கியா என்று கேட்டு வாங்குகிறார்களாம் ஐரோப்பியர்கள்.

No comments: