Monday, June 20, 2011

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர் : இந்து முறைப்படி இன்று திருமணம்.

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர்:இந்து முறைப்படி இன்று திருமணம்

சீனப் பெண்ணை காதலித்து மணந்த ஆத்தூர் என்ஜினீயர் ருசிகர பேட்டி அளித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் ஆரியூர் தெருவை சேர்ந்த நடராஜன்-சரோஜா தம்பதிகளின் மகன் செந்தில் ராஜா பி. இ. இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் சீனா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றினார்.

அப்போது இவருக்கும் அதே கம்பெனியில் பணியாற்றி வரும் அத்பில் என்ற ஹிஷேங்கிபிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இவர்களது திருமணம் இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.

சீனப் பெண் அத்பில் சேலை கட்டி இருந்தார். பூவும், பொட்டும் வைத்து அசல் தமிழ் பெண் போல காட்சி அளித்தார். அவருக்கு மணமகன் செந்தில்ராஜா தாலி கட்டினார். சீனப் பெண்ணை காதலித்து மணந்தது குறித்து என்ஜினீயர் செந்தில்ராஜா நிருபரிடம் கூறியதாவது:-

நான் கடந்த 4 ஆண்டுகளாக சீனா நாட்டில் குவாங்ஷோ பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் அத்பில் பணியாற்றி வந்தார். அவர் அக்கவுண்டன்சி பட்டம் பெற்று உள்ளார். நானும் அவரும் வேலை விஷயமாக சந்திக்கும் போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது.

சீன மொழி புரியாவிட்டாலும், நானும் ,அவரும் ஆங்கிலத்தில் பேசி வருவோம். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நானும் அவரது வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன் அவரது பெற்றோருக்கு என்னை பிடித்து விட்டது. அவர்கள் நன்றாக பார்த்து கொண்டனர்.

பின்னர் எங்களது காதலுக்கு எனது பெற்றோரும், சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் சீனாவில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். சீன அரசும், அங்குள்ள இந்திய தூதரகமும் எங்களது திருமணத்தை அங்கீகரித்தன.

நாங்கள் பின்னர் இங்கு வந்து இன்று எங்களது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். கடந்த வாரம் எனது அண்ணன் திருமணம் நடந்தது.அதற்காக நானும், அத்பில்லும் வந்து இருந்தோம். எங்களது திருமணம் முடிந்து விட்டதால் இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் சீனா சென்று அவரது பெற்றோரிடம் வாழ்த்து பெறுவோம். பின்னர் அங்கேயே குடும்பம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்திற்கு வந்து இருந்த உறவினர்களை செந்தில் ராஜா மணப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் உறவினர்களை பார்த்து நன்றி என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். நாடு, இனம், மொழி கடந்து வளர்ந்த இந்த காதல் தம்பதிகளை உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள், ஆத்தூர் பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

No comments: