Monday, June 20, 2011

2ஜி வழக்கு : கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

2ஜி வழக்கு: கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. 13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 20-ந் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதிகள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

No comments: