Saturday, June 18, 2011

தேர்தலுக்கு முன்பு ரூ. 8 ஆயிரத்துக்கு விற்ற மணல் ரூ. 14 ஆயிரமாக உயர்வு.

ரூ. 8 ஆயிரத்துக்கு விற்ற  லாரி மணல் விலை ரூ. 14 ஆயிரமாக உயர்வு: அரசு கட்டிட மராமத்து பணிகள் பாதிப்பு

தமிழ்நாட்டில் 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித்துறை மூலம் மணல் வினியோகம் நடந்தபோது மணல் விலை கட்டுப்பாட்டில் இருந்தது.

அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி நடந்தாலும் இடைத்தரகர்கள் புகுந்து மணல் விலையை அதிகளவு உயர்த்தி விற்றனர். சட்டசபை தேர்தல் சமயத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 ஆயிரமாக உயர்ந்தது.

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மணல் விலையை குறைக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆனாலும் இன்னும் முழுமையாக மணல் விலை குறைய வில்லை. இதுபற்றி பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி கூறியதாவது:-

பொதுப்பணித் துறையில் பதிவு செய்த காண்டிராக்டர்கள் சென்னையில் 146 பேர் உள்ளனர். அரசு கட்டிடங்களை மராமத்து பணிகள் செய்யும் இவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. தேர்தலுக்கு முன்பு ரூ. 8 ஆயிரத்துக்கு கிடைத்த ஒரு லாரி மணல் இப்போது ரூ. 14 ஆயிரம், ரூ. 15 ஆயிரத்துக்கு தான் கிடைக்கிறது.

அரசாங்கம் ரூ. 624-க்கு தான் ஒரு லாரி மணல் விற்கிறது. மணலை லாரியில் ஏற்றும் கூலிகள் செலவு என ரூ. 3 ஆயிரம் போட்டு இதற்கு முன்பு ரூ. 5 ஆயிரத்துக்கு கிடைத்தது. அதன்பிறகு கடந்த ஆட்சியில் ரூ. 9 ஆயிரம் இருந்தது. தற்போது ரூ. 14 ஆயிரமாகி விட்டது. இதனால் அரசு கட்டிட மராமத்து பணிகள் செய்ய முடியாமல் பாதியில் நிற்கிறது.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை ஸ்டான்லி ஆஸ்பத்திரி, தாதண்டர்நகர் அரசு இல்லம், அரசு குடியிருப்பு போன்ற அரசு கட்டிட மராமத்து பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் கிடப்பில் போட்டுள்ளோம். எங்களைப் போல் மாநகராட்சி காண்டிராக்டர்கள், வீட்டுவசதி வாரிய காண்டிராக்டர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயிரம் ஆக குறைந்தால் தான் கட்டுமான தொழில் நன்றாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: