Saturday, June 18, 2011

யுனிடெக் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்து முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய  யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின்  ரூ.5 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்; அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை கூறி உள்ளது. இது பற்றி சி.பி.ஐ., அமலாக் கப்பிரிவு, பாராளுமன்ற கூட்டுக்குழு, பாராளுமன்ற பொது கணக்கு குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை கைமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இது வரை சிறப்பு கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் 14 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.அந்த 14 பேரும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர யுனிடெக் வயர்லஸ், சுவான் டெலிகாம், ரிலையன்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முறைகேடாகப் பெற்ற இந்த நிறுவனங்கள் அவற்றை விற்றும், தில்லு முல்லு செய்தும் கொள்ளை லாபம் சம்பாதித்தன. குறிப்பாக யுனிடெக் நிறுவனம் தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்றதில் அதிக லாபம் சம்பாதித்தது. அந்த நிறுவனம் டெலிநார் நிறுவனத்துக்கு தனது 66.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 6 ஆயிரத்து 135 கோடி ரூபாய் லாபம் அடைந்தது.

இதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய ஆவணங்களை கைப்பற்றி குற்றப்பத்திரிகையிலும் அதை பதிவு செய்துள்ளனர்.முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட இந்த பணம், சொத்துக்களை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் சொத்துக்களை முடக்கும் பணிகளை அமலாக்கப் பிரிவு தொடங்கி உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் யுனிடெக் வயர்லஸ் (தமிழ்நாடு) நிறுவனம் தான் முதலில் சிக்கும் என்று தெரிய வந்துள்ளது. சொத்துக்களை முடக்கப் போவதாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து தற்காலிக நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்க போவதாக அந்த நோட்டீசில் அமலாக்கப் பிரிவு கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தங்களுக்கு அமலாக்கப் பிரிவிடம் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை என்றார். யுனிடெக் வயர்லஸ் நிறுவனத்தை தொடர்ந்து டிபிரியாலிட்டி நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


No comments: