Tuesday, December 20, 2011

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் ; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்.

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் நாளை (புதன்கிழமை) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்காகன பக்தர்கள் திரள்வார்கள். இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பக்தர்கள் சிரமமின்றி சனிபகவானை தரிசிக்க தர்ம தரிசனம், ரூ.100 மற்றும் ரூ.300 கட்டணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நளன் குளத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே தற்காலிக உடை மாற்று மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சியையொட்டி இன்று இரவு 10 மணியளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருள்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவுக்கு நாளை வரும் பக்தர்கள் வழிபட்டு செல்ல வசதியாக கோவிலின் வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

நாளை இரவு சனீஸ்வரபகவான் மீண்டும் யாதாஸ் தானத்துக்கு செல்கிறார். அதோடு சனீஸ்வர பகவானுக்கு நாளை காலை 5 மணி முதல் நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்படி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பெயர்ச்சியை குறிக்கும் வகையில் காலை 7.51 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவில் பகுதியில் 32 இடங்களிலும், நளன்குள பகுதியில் 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

No comments: