Tuesday, December 20, 2011

கொலை வழக்கில் பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யயாமல் விட்ட சேலம் போலீஸ்.



சேலம் நகரில் உள்ள நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். தனது விசுவாசியான இவருக்கு பல்லவன் கிராம வங்கியின் இயக்குனாராகவும் ப.சிதம்பரம் பதவி வழங்கியிருந்தார்.

சேலத்தில் வளர்ந்து வரும் இந்த காங்கிரஸ் பிரமுகருக்கு கொடிகட்டுவது, தோரணம் கட்டுவது, வாழ்க கோசம் போடுவதற்காக சில எடுபுடிகள் எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

அப்படி இருந்த எடுபுடிகளில் ஒருவர் கரியபெருமால் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்கிற கார்த்திக். இந்த எடுபுடியை கடந்த 11ம் தேதி இரவு கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள எட்டி மாணிக்கம்பட்டி என்ற இடத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு சோளக்காட்டில் வைத்து யாரோ கொலை செய்துவிட்டனர்.

கொலை செய்யப்பட்டவரிடம் கிடந்த செல்போனை வைத்து விசாரணை செய்ததில், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வருன்கிருஷ்ணன் என்கிற விஜய் என்பவர் கொலையான அன்று பல தடவை கார்த்தியுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விஜய்யும், வெங்கட்டராமனின் இன்னொரு எடுபுடிதான், விஜயை பிடித்து விசாரணை செய்ததில், தானும், தன்னுடைய இன்னொரு நன்பரான கிச்சிப்பாளையம் குமார் என்கிற சிவக்குமாரும் சேர்ந்து தான் கார்த்தியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை செய்தபோது, எனக்கும் அவனுக்கும், வரவு செலவு பிரச்சனை.... என்று முதலில் சொல்லியுள்ளான், ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலம் வேறு மாதிரி இருந்துள்ளது.

இதற்கிடையில் கொலையானவன், கொலை செய்தவன் இருவருமே அந்த காங்கிரஸ் பிரமுகரின் ஆட்களாக இருந்தும் இரண்டு பக்கமுமே அந்த பிரமுகர் தலை காட்டவில்லை.

கொலைக்கு வேறு பலமான காரணம் இருக்கும் என்று சந்தேகம் கொண்ட போலீசார், கொஞ்சம் கடுமையாக விசாரிக்க, என்கிட்ட ஒருத்தன் பணம் வாங்கிக்கிட்டு ரொம்பநாளா திருப்பி குடுக்காம இழுத்து அடிக்கிறான், அவன்கிட்ட பணம் வாங்கிக்குடுன்னு நான் தான் கார்த்திகிட்ட சொன்னேன், அதுக்காக நாங்க மூன்று பேரும் போனப்பத்தான் அந்த சோளக்காட்டுல ஒண்ணா தண்ணியடிச்சோம். அப்ப எங்க அண்ணன் வெங்கட்டராமன் பொண்டாட்டி ராஜேஸ்வரிக்கும் அவருக்கு தெரிஞ்ச ஒரு பஸ் உரிமையாளர் மணிவாசகம் என்பவருக்கும் கள்ளக்காதல் இருக்குதுன்னு கார்த்தி என்கிட்ட சொன்னான்...., இவன் சொன்னத என்னால தங்கிக்க முடியல... எங்களுக்கு எல்லாம் தாயாக இருந்து சோறு போட்ட அண்ணியைபற்றி இவன் தப்ப பேசினது என்னால தாங்கமுடியலே... அதனாலதான், நான் அவனை கொலை செய்தேன் என்று சொல்லியுள்ளான்.

சரி, நீ யாருகிட்ட பணம் கொடுத்தே...? என்று போலீசார் போட்ட முதல் கொக்கிக்கு பதில் சொல்ல முடியவில்லை விஜய்யால். சரி.... நீயும் கார்த்தியும் பணம் வசூல் செய்ய போனவர்கள் எதுக்கு கத்தியெல்லாம் எடுத்து போனீங்க....? என்று போலீசார் கேட்டுள்ளனர்.

அதற்கும் விஜய்யால் பதில் சொல்ல முடியவில்லை. “அண்ணிக்கும், பஸ் ஒன்றுக்கும் கள்ளத்தொடர்பு என்ற போதே இதுக்கும் “அண்ணனுக்கும் தொடர்பு வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, முழு விசயத்தையும் சொல்லிவிட்டான் விஜய்.

அவனது வாக்குமூலம் எப்படியிருந்தது என்பதை நம்மிடம் சொன்ன போலீசார், அவ்வப்போது எங்களுக்கு எடுபுடி வேலைகள் கொடுக்கும் வெங்கட்டராமனின் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருப்போம்.

பல்லவன் கிராம வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்துகொண்டு சமீபகாலமாக அதிக வருமானம் பார்த்துவரும் வெங்கட்டராமனனின் மனைவி ராஜேஸ்வரிக்கும், மணிவாசகம் என்ற ஒரு பஸ் உரிமையாளர் ஒருவருக்கும் “கள்ளக்காதல் இருந்தது. இதை பலதடவை நாங்க பாத்திருக்கிறோம்.

வெங்கட்டராமன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த கார்த்தி அண்ணன் “மனைவியும் “மணிவாசகாவும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து விட்டேன் என்றும், “அண்ணா நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தை கவனமாபாருங்க இல்லையின்னா உங்க “மானம் போயிரும் என்று வெங்கட்டராமனிடம் சொல்லியிருக்கிறான்.

அப்படியா நடக்குது...? என்று ஆச்சரியப்பட்ட வெங்கட்டராமன் “சரி இதை எங்கயும் வெளியில சொல்லாதே... என்று கொஞ்சம் “கரன்சியை கார்த்தியின் கையில் கொடுத்துவிட்டு போகிறார்.

ஒகோ... “இதுக்கெல்லாம் பணம் கொடுப்பாங்க போல என்று ருசி கண்ட கார்த்தி, கொஞ்ச நாளுக்கு பின்னர் தனக்கு இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரிடம் போய் கேட்டுள்ளான். பலதடவை அப்படி கொடுத்துள்ளார்.

கார்த்தி மீண்டும்... மீண்டும்.... பணம் கேட்டு தொல்லை கொடுக்க.... “நீ கேட்டப்பவேல்லாம் நான் பணம் குடுக்க முடியாது... நீ வேண்ணா எம்பொண்டாட்டிக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஊருக்குள்ள போய் சொல்லு...., யாரும் நம்பமாட்டங்க.... என்று சொல்லிவிட்டார் வெங்கட்டராமன்.

அப்ப நான், என் வேலைய பார்த்துக்கிறேன், அந்த போட்டோவை ஒரு பிரின்டு போட்டு ஊர்பூராவும் நான் போஸ்டர் அடிச்சி ஓட்டப்போறேன்.... என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளான் கார்த்தி.

“போஸ்டர் அடிச்சு ஒட்டப்போறேன் என்று சொன்னதும் பதறிப்போன வெங்கட்டராமன் “டேய் என்னடா சொல்லறே...? என்று கொஞ்சம் இறங்கி வந்து கேட்டுள்ளார், ஆமானா “நீ சும்மா காசு குடுப்பியாண்ணா...? அதனால தான் நான் எல்லாத்தையும் “வீடியோ போட்டோவெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன் என்று சொல்லியுள்ளான் கார்த்தி.

இப்போதைக்கு இதை வச்சுக்கோ.... என்று கொஞ்சம் பணத்தை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு, இதற்கு ஒருவழியில் முடிவுகட்ட விரும்பிய வெங்கட்டராமன், தனது இன்னொரு எடுபுடியான விஜயிடம் சொல்லி கார்த்திக்கு “முடிவு கட்டச்சொல்லியுள்ளார்.

அதன்படி, விஜய் தன்னுடைய நண்பரான கிச்சிப்பாளையம் சிவக்குமார் என்பவரை கூட சேர்த்துக்கொண்டு கார்த்தியை கூப்பிட்டு எனக்கு ஒருவன் பணம் கொடுக்க வேண்டும், அதை என்னால் வாங்கமுடியவில்லை.... நீ வந்தால் தான் அவன் எனக்கு கொடுப்பான் என்று சொல்லி ஒருவாரமாக மூவரும் தினமும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துள்ளனர்.

கார்த்தி, விஜயை முழுமையாக நம்ம்பிய பின்னர், அவனை கூட்டிப்போய் சோளக்காட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். அப்போது கார்த்தியை, வெங்கட்டராமனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் பஸ் ஓனருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொன்னதையும், அதை சொல்லச்சொல்லி சிவக்குமார் மிரட்டுவதையும் கார்த்தியை குத்தி கொலை செய்தபோது சோளக்காட்டுக்குள் நடந்ததையெல்லாம் விஜய் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.

அதுவுமில்லாமல், கொலை செய்தபின்னர் போன் செய்து வெங்கட்டராமனிடம் பேசியது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, இந்த ஆதாரத்தை வைத்து பின்னர் வெங்கட்டராமனிடம் மிரட்டி பணம் வாங்க இவன் திட்டமிட்டுள்ளான்.

அந்த செல்போனில் பதிவு செய்யப்படிருப்பதையும் கைப்பற்றிய கொண்டலாம்பட்டி போலீசார் வெங்கட்டராமனை கைது செய்ய முடிவு செய்திருந்த நேரத்தில், இந்த தகவல், மல்லூர் காவல் நிலையத்தில் புரோக்கராக இருக்கும் தபால்காரர் தனபால் என்பவருக்கு தெரிந்துள்ளது. சேலம் மாவட்ட போலிஸ் டிபார்ட்மென்டில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவர் இந்த தபால்காரர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பல உயர் அதிகரிகளுக்கு இந்த தனபால்தான் இடமாறுதல் உத்தரவு வாகிக்கொடுப்பவர், இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளா தனபால் நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வார்.

காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்கில் இருக்கும் வேங்கட்டராமனை போலீசார் தூக்கப்போவது தெரிந்தது, நேராக வெங்கட்டராமனிடம் போய் டீல் பேசி.... இந்த விசயத்தை “கமுக்கமாக” முடிக்க 40 லட்சத்தை வாங்கிக்கொண்டு வந்து “பரமசிவனின்” பெயரை கொண்ட சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளருக்கும், “தாய்மொழி”யின் செல்வனான ரூரல் துணை கண்காணிப்பாளருக்கும் இருபத்தி ஐந்து லட்சங்களை வாரி இரைத்து விட்டு மீதியை அமுக்கிக்கொண்டார் தனபால்.

உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து கொடுத்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீசார், மற்றும் சில அதிகாரிகள் இப்போது அந்த காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு கூட போடமுடியாமல் உள்ளனர்.

தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் சில நல்ல உள்ளம கொண்ட உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளார்கள். இந்த விபரங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர் களுக்கும் தெரிந்துவிட்டதால் இப்போது வெங்கட்டராமன் மீது என்ன வழக்கு போடலாம் என்று ஆலோசனை நடத்திவருகிறார்கள் சேலம் மாவட்ட போலிஸ் அதிகாரிகள்.

நன்றி - நக்கீரன்

No comments: