Tuesday, December 20, 2011

வைகோவை தேடும் உளவுத்துறை : கூடலூருக்குள் ரகசியமாகச்சென்றாரா?



பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.

No comments: