Thursday, August 18, 2011

நான் ஊழல் செய்யவில்லை என நீதிபதி செளமித்ரா சென் ராஜ்யசபாவில் வாதம்..



ராஜ்யசபா இன்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ராஜ்யசபாவில் தொடங்கின. விசாரணைக்குட்படுத்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் நேரில் ஆஜராகி அவர் சார்பி்ல் அவரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

நான் ஊழல் செய்யவில்லை. இதுதொடர்பாக ராஜ்யசபாவுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அவர் வாதிட்டார்.

தவறான நடத்தை காரணமாக ஒரு நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் ராஜ்யசபாவில் வாதத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று பிற்பகலுக்கு மேல் செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானம் மீதான வாதம் தொடங்கியது. இதற்காக ராஜ்யசபா அரங்கம் கோர்ட் போல மாறியது.

முன்னதாக செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 90களில் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ. 24 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவில் ஆஜரானார் சென். ராஜ்யசபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார் சென். அவருக்குப் பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சிபிஎம் உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதில் தானே வாதாடினார் சென்.

அவர் கூறுகையில், என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

எனக்கும், ராஜ்யசபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.

வாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும். அதில் தீர்மானம் நிறைவேறினால் ஒரு வாரத்திற்குள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி,ஒரு உயர்நீமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார் வந்தால், அவரை உடனடியாக பதவி நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, உச்சநீதின்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1993ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பிலில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் தீர்மானம் தோற்று, ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது..

எனவே தற்போது நீதிபதி சென்னின் பதவி தப்புவதும், தப்பாமல் போவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இருஅவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்குக் கிடைக்கும்.

No comments: