Sunday, July 24, 2011

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது ; கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.



தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்து,

நேர்மாறான விளைவுகளின் காரணமாக இன்று நாம், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம்பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

இது யாரால் வந்த நிலை என்று சிந்திப்பதைவிட நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன். ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தொட்டுப் பார்த்து, நெஞ்சைத் தடவிப் பார்த்து, தெரிந்து கொண்டிருக்கின்ற அந்த உண்மையை நான் மீண்டும் மீண்டும் இங்கே கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.

ஏனென்றால், இன்றைக்குக் கழகம் புண்பட்டிருக்கின்றது. கழகம் புண்பட்டிருக்கிறது என்றால், நான் புண்பட்டிருக்கின்றேன். பொதுச்செயலாளர் பேராசிரியர் புண்பட்டிருக்கின்றார். கழகத்தினுடைய தளபதிகள் புண்பட்டிருக்கின்றார்கள். கழகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லாம் புண்பட்டிருக்கின்றார்கள் என்பது அதற்கு பொருள்.

ஆகவே, இந்தப் புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் தி.மு.க.வுடைய ஆற்றல் பெருகி, தி.மு.க. அகிலம் பரவ இருவண்ணக் கொடியை ஏற்றுகின்ற அந்தக் காலம் நிச்சயமாக வரும், வரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் மீண்டும் இன்றைக்கு பூஜ்யத்திலே இருந்து ஆரம்பிக்கின்றோம். இருபது பேரோ, இருபத்திரண்டு பேரோ சட்டசபையிலே இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சிலபேர் கழகத்தின் சார்பில் இடம் பெற்றிருப்பதாலோ நாம் பெரிய அளவிலே மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.

இந்த இயக்கத்தை நடத்துவது, நடத்திக் கொண்டிருப்பது, நடத்தியதெல்லாமே, திராவிட சமுதாயத்திற்கு, திராவிட இனத்திற்கு ஏற்றமும் வெற்றியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சியினுடைய வெற்றி தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்று யாரும் சொல்லமுடியாது. இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.க. கட்சியின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால், ஆமாம், அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, லட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்ததியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால்தான், இன்றைக்கு நீட்டி முழங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட்டோம் என்றெல்லாம் சிலர் நம்மைப் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் சொல்லுகின்றேன். இதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரே ஒரு இடத்திலேதான் நாம் வெற்றிபெற முடிந்தது. சென்னை துறைமுகம் தொகுதியிலே நான் ஒருவன்தான் வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், தனித்து எந்தவிதமான உதவியும் துணையுமின்றி நிற்க நேர்ந்தது.

அந்தக்காலத்திலேயேகூட, அந்த ஒரு தொகுதியிலே இருந்து தொடர்ந்து பல தொகுதிகளைப் பெற்று, ஆட்சியை அமைத்தோம் என்றால் மீண்டும் அந்தக் காலம் வராமலேயே போகாது. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற காரணத்தால், நம்முடைய கொள்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், லட்சியங்கள், குறிக்கோள்கள் இவை எல்லாம் நிறைவேறுவதற்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த வெற்றி ஏதோ பத்து இடம், பதினைந்து இடம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கிறோம் என்ற அந்த வெற்றியல்ல. அப்படிப்பட்ட வெற்றிக்காக நாம் பாடுபடவில்லை. நாம், எம்.பிக்கள் - எம்.எல்.ஏ.,க்கள் வரவேண்டுமென்று எண்ணுகிற அதேநேரத்தில், அந்த எண்ணிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை வளர வேண்டும், கொள்கை வலுத்திட வேண்டும், லட்சியம் ஈடேற வேண்டும் என்பதை சேர்த்துத்தான் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன்.

அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன். அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை.

இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு.க.வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. "எவரும் அழிக்க முடியாது'' திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எஃகுக் கோட்டை. அது ஊதி, ஊதி அலைக்கழிக்கப்படுகின்ற துரும்பல்ல.

இது தூண். இந்தத் தூணை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது என்பதை, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக, பெரியாருடைய காலத்திலிருந்து, அறிஞர் அண்ணாவினுடைய காலத்திலிருந்து, இன்றைக்கு நம்முடைய காலம் வரை, எவ்வளவு அக்கிரமங்களை - போட்டிகளை நாம் சந்தித்து, இந்த தியாக உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபித்து, நாம் நம்முடைய கொடி நிழலில், கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நான் கேட்கின்றேன். நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி, தி.மு.க.வுக்கு புதிய நெருக்கடி அல்ல. இன்றைக்கு வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மாத்திரமல்ல. நானே தேடப்பட்டவன்தான். நம்முடைய கழகத்தின் முன்னணி வீரர்களெல்லாம் தேடப் பட்டவர்கள்தான். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த திங்களிலேயே என்னை என்ன பாடுபடுத்தி, சிறையிலே அடைத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எமர்ஜென்சியைவிட கொடுமையா இந்தியாவிலே வரப்போகிறது. தமிழ்நாட்டிலே வரப்போகிறது. எமர்ஜென்சியையே ஊதியவர்கள் நாம். இன்றைக்கு யாருக்கும் பயப்படமாட்டோம். அத்தகைய துணிச்சல் உள்ள சிங்கங்களாக, வீரர்களாக, வேங்கைகளாக இருக்கின்றோம். தி.மு.க.வின் தீரர்கள் - செயற்குழு உறுப்பினர்களாக இன்றைக்கு கூடியிருக்கின்றீர்கள். செயற்குழுவில் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டும். மேலும், கழக வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாளையதினம் பொதுக்குழுவிலே விரிவாக நாம் பேச இருக்கின்றோம்.

அதற்கான தீர்மானங்கள் என்னென்ன, இருபத்தைந்து, முப்பது தீர்மானங்களுக்கு மேல், நாளைய தினம் (இன்று) நிறைவேற்றப்பட இருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் எப்படி அமையவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இன்றைக்கு நீங்கள் அமைத்துத் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்குத்தான் இந்த செயற்குழு. இந்தச் செயற்குழுவிலே இன்றைக்கு போடப்படுகின்ற அடித்தளம், நாளைய பொதுக்குழுவின் தீர்மானங்களாக வெளிவரும்.

"இனி பொறுப்பதில்லை'' என்ற பாரதியினுடைய வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து, அந்த நிலையை அடைய, வென்றிட, வாகை சூடிட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நிர்ணயிக்கின்ற குழுவாகத்தான் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு அமையவிருக்கின்றது. அதற்கேற்ப இந்தச் செயற்குழுவிலே உங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என்னுடைய முன்னுரையை நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments: