Thursday, July 21, 2011

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு !



"நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி களுக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே எம்.பி.பி.எஸ். படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திர மவுலி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மருத்துவ கவுன்சில் கவர்னர் புருசோத்தம் லால், சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை இணைய தளத்தில் வெளியிடுவது என்றும், பொது மக்களின் கருத்துக்களைக் கேட்பது என்றும் முடிவாகி இருக்கிறது. இந்தத் தகவலை, கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திர மவுலி, புருஷோத்தம் லால், வினீத் ஜோஷி உறுதி செய்தனர்.